திருப்பூர் : உடுமலையில் பிடிக்கப்பட்ட காட்டு யானை சின்னத்தம்பியை கையாண்ட விதத்தின் மூலம் வனத்துறையினரின் பார்வையை தன் பக்கம் இழுத்தது கும்கி யானை சுயம்பு.
திருப்பூர் : உடுமலையில் பிடிக்கப்பட்ட காட்டு யானை சின்னத்தம்பியை கையாண்ட விதத்தின் மூலம் வனத்துறையினரின் பார்வையை தன் பக்கம் இழுத்தது கும்கி யானை சுயம்பு.
உடுமலையில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த காட்டு யானை சின்னத்தம்பி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதற்காக, கும்கி யானைகள் கலீம் மற்றும் சுயம்பு ஆகியவை வரவழைக்கப்பட்டன.

காட்டு யானைகளை விரட்டுவதிலும், பிடிப்பதிலும் கும்கி கலீம் மிக்க அனுபவமிக்கது. ஆனால், அண்மையில் சின்னத்தம்பியின் ஆக்ரோஷத்திற்கு கலீம் மற்றும் மாரியப்பன் மிரண்டு ஓடின. இதைத் தொடர்ந்து, மாரியப்பன் மீண்டும் யானைகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், கோழிக்கமுதி யானைகள் முகாமில் இருந்த 22 வயதுக்கும் குறைவான கும்கி சுயம்பு அழைத்து வரப்பட்டது. அனுபவமில்லாத சுயம்பு, சின்னத்தம்பியை பிடிப்பதில் பக்கபலமாக இருக்குமா..? என வனத்துறையினர் சந்தேகித்து வந்தனர்.
இந்த நிலையில், இன்றைய தினம் சின்னத்தம்பியை தனி ஒருவனாக இருந்து லாரியில் ஏற்றியது கும்கி சுயம்பு. இதற்கு முக்கிய காரணம் பாகன் முருகனின் சரியான வழிநடத்துதலே ஆகும். அனுபமிக்க கலீம் யானை லாரியின் அருகில் அமைதியாக மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம், வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் குறைந்த அளவிலான கும்கிகளே உள்ள நிலையில், இளம் கும்கி யானை சுயம்புவின் செயல் அனைத்து வன அதிகாரிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், கும்கி யானைகள் பெரும்பாலும் வயது முதிர்வுடன் காணப்பட்டு வரும் நிலையில், காட்டு யானைகளை கையாளுவதற்கு அடுத்த தலைமுறையாக சுயம்பு வனத்துறையினரின் எண்ணத்தில் பதிந்து விட்டது என்பதே உண்மை.

"இது கும்கி சுயம்புவின் முதல் ஆபரேசன். இதில், தனி ஒருவனாக நின்று சின்னத்தம்பியை லாரியில் ஏற்றியது மகிழ்ச்சியளிக்கிறது," என்கிறார் கும்கி கலீமின் பாகன் மணி.