கோவை : ஶ்ரீ நேரு வித்யாலயா பள்ளியில், கட்டணம் செலுத்த தவறிய 12ம் வகுப்பு மாணவனுக்கு மாதிரி செய்முறைத்தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், ஊடகத்துறையினர் குறுக்கீட்டுக்கு பின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளான்.
கோவை : ஶ்ரீ நேரு வித்யாலயா பள்ளியில், கட்டணம் செலுத்த தவறிய 12ம் வகுப்பு மாணவனுக்கு மாதிரி செய்முறைத்தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், ஊடகத்துறையினர் குறுக்கீட்டுக்கு பின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளான்.
கோவை, ஆர்.எஸ்.புரம் ஶ்ரீ நேரு வித்யாலயா பள்ளியில் 12ம் வகுப்பு கணினி அறிவியல் பிரிவில் பயிலும் மாணவன் எம்.பகவத் கீத். அவர் இன்று நடைபெற்ற மாதிரி செய்முறைத்தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை, என அவரது தாய் பொன்னி குற்றம் சாட்டியுள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக, பள்ளி கட்டணம் ரூ.28 ஆயிரத்தைக் கட்ட முடியவில்லை. இதனால், கட்டணம் செலுத்தாததை காரணத்தைக் காட்டி பள்ளி நிர்வாகம் பகவத்தை தேர்வெழுத அனுமதிக்கவில்லை என்கிறார் பொன்னி. இதையடுத்து, மாணவனின் தாய் ஊடகத்தின் உதவியை நாடியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து, ஊடகத்தை சார்ந்தவர்கள் பள்ளிக்கு சென்று இந்த விகாரத்தை குறித்து ஆராய்ந்தனர். அதன் பின்னர், மதிய வேளையில் மாணவன் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.
இதுகுறித்து மாணவனின் தாயார் கூறுகையில், "எனக்கு பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது. அதில், பள்ளி கட்டணத்தை முழுமையாக கட்டாததால் என் மகனை மாதிரி செய்முறைத்தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என தெரிவித்தார்கள். இது அவனுடைய 12ம் வகுப்பு தேர்வு என்பதால் அவனை அனுமதிக்கக் கோரினேன். அவனுடைய வாழ்க்கை இதனால் பாதிக்கக்கூடாது என வலியுறுத்தினேன். ஆனால், அவர்கள் என்னிடம் மிகவும் சாதாரணமாக, அவனை அழைத்து செல்ல கூறிவிட்டார்கள்.
என்னால் அதை செய்ய முடியாது. நான் ஓடி ஒளிய போவதில்லை, என்னுடைய மகனின் அசல் சான்றிதழ்கள் அனைத்தும் பள்ளியில் இருக்கிறது. என்னுடைய மகன் மட்டுமல்ல, மகளும் இதே பள்ளியிலுள்ள மழலையர் பள்ளியில் தான் படித்து கொண்டிருக்கிறாள். அப்படியிருக்கும் போது, எப்படி அவர்கள் மனிதாபிமானமின்றி என் மகனை பிற மாணவர்கள் முன்பு அவமதிக்கும் செயலை செய்தார்கள். இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்?, இந்த நேரத்தில் எனக்கு உதவ ஊடகத்தை நாடினேன். இதையடுத்து, ஊடகத்துறையினர் பள்ளிக்கு வந்து விசாரிக்கத் தொடங்கியதும், மதியம் தேர்வு எழுதும் குழுவுடன் இணைந்து என் மகனும் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளான்," என்றார்.
இதனிடையே, மாணவனின் தாயாருடைய குற்றச்சாட்டைப் பள்ளி ஏற்கவில்லை. இந்த குற்றச்சாட்டு குறித்து பள்ளி முதல்வர் செண்பக ரமேஷ் கூறுகையில், "அந்த மாணவனை பள்ளி ஒருபோதும் திருப்பி அனுப்பாது. மதியம் தேர்வெழுதும் மாணவர்களுடன் சேர்ந்து எழுத தான் அனுமதிக்கப்பட்டுள்ளான். நாங்கள் ஒரு போதும் கட்டணத்திற்காக, எங்கள் மாணவர்களை அவமானப்படுத்தியதில்லை. கட்டணம் கொடுக்க போராடும் அவனுடைய அம்மாவிற்கு உதவ முயற்சித்து வருகிறோம். தற்போது அந்த மாணவன் தேர்வெழுத தொடங்கிவிட்டான். பிரச்சனை முடிந்தது," என்றார்.