கோவை : புலியகுளம் பகுதியில் முன்விரோதம் காரணமாக, நேற்றிரவு இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை : புலியகுளம் பகுதியில் முன்விரோதம் காரணமாக, நேற்றிரவு இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், புலியகுளம் சீர்காழி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் லியோ மார்ட்டீன் (29). இவர் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். ஏற்கனவே, இவர் மீது கொலை வழக்குகள் உள்ளன. இந்நிலையில் லியோ மார்ட்டீன் நேற்றிரவு சுமார் 11 மணியளவில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் இராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர், தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் கொலை குறித்து விசாரணை நடத்தினர். இதில், உயிரிழந்த லியோ மார்ட்டீனின் நண்பர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், இவர் ஏற்கனவே கொலை வழக்குகளில் இருப்பதால் எதிர்த் தரப்பினர் யாராவது கொலை செய்திருப்பார்கள் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்தனர்.
இதனிடையே, விசாரணையில் நேற்றிரவு முன்விரோதம் காரணமாக தருண் மற்றும் விக்கி என்பவரை லியோ மார்ட்டீன் மிரட்டியுள்ளதும், அதேபோல இவர்களுக்குள் இது மோதலாக உருவானதும் தெரியவந்தது. இதையடுத்து, இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். அப்போது இருவரும் சேர்ந்து லியோ மார்டீனை குத்தி கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து, இவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் வேறு ஏதும் நபர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.