நீலகிரி : தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இறைச்சி விற்பனையாளர்கள் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, மஞ்ச குருத்து இலை மற்றும் தேக்குமர இலைகளை பயன்படுத்தி வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நீலகிரி : தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இறைச்சி விற்பனையாளர்கள் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, மஞ்ச குருத்து இலை மற்றும் தேக்குமர இலைகளை பயன்படுத்தி வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்தது. இறைச்சி, மீன் பார்சல் செய்ய 'பிளாஸ்டிக்' கேரி பைகளை பயன்படுத்தி வந்த வியாபாரிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். சமவெளிப் பகுதிகளில், இதற்கு தீர்வாக, வாடிக்கையாளர்களைப் பழைய முறைப்படி, பாத்திரம் எடுத்து வரும்படி, வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனைத் தவிர்க்க, நீலகிரியில் கூடலூர் பகுதி வியாபாரிகள் இப்பகுதியில் கிடைக்கும் 'மஞ்ச குருத்து இலைகளில் இறைச்சி, மீன் பார்சல் செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்த இலைகளின் தேவை, அதிகரித்துள்ளதால், சிலர் இதனை தொழிலாக மாற்றியுள்ளனர். இருசக்கர வாகனங்களில் வைத்து மீன் விற்பனை செய்பவர்களுக்கு இந்த இலைகள் கிடைக்காததால், தேக்குமர இலைகளில் மீனை 'பார்சல்' செய்து விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், "பிளாஸ்டிக் தடையால், இறைச்சி, மீன் பார்சல் செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதற்கு மாற்றாக தற்போது மஞ்சகுறுத்து இலை, தேக்குமர இலைகளை பயன்படுத்தி, இறைச்சி மீன்களை பார்சல் செய்து விற்பனை செய்து வருகிறோம்," என்றனர்.
பிளாஸ்டிக் இல்லா நீலகிரியை உருவாக்கும் முயற்சியில், இந்த தள்ளுவண்டி வியாபாரிகளும் ஒத்துழைப்பு அளிப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.