கோவை : ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உயிரிழந்த பிறந்த குழந்தையின் தலையில் காயம் இருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்த பெற்றோர், மருத்துவமனையின் முன்பு போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை : ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உயிரிழந்த பிறந்த குழந்தையின் தலையில் காயம் இருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்த பெற்றோர், மருத்துவமனையின் முன்பு போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போத்தனூர் பகுதியில் வசித்து வரும் தம்பதி விக்ரம் மற்றும் பவித்ரா. இவர்களுக்கு திருமணமாகி சுமார் ஒரு ஆண்டு காலம் ஆகிறது. பவித்ரா மகப்பேறு சிகிச்சைக்காக ஆரம்பத்திலிருந்தே ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உள்ள மருத்துவர் லலிதா என்பவரிடம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை பவித்ரா பிரசவத்திற்காக ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாட்களாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று பவித்ராவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், குழந்தைக்கு உடலில் நோய் பாதிப்புகள் இருப்பதாகக் கூறி மருத்துவர்கள் மருத்துவமனையில் இன்க்குபெட்டரில் வைத்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி மருத்துவமனையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனால், மனமுடைந்து போன பெற்றோர், குழந்தைக்கு இறுதிச் சடங்கு செய்வதற்காக கொண்டு சென்றனர். அப்போது, குழந்தையின் தலையில் வைக்கப்பட்டிருந்த தொப்பியை பெற்றோர்கள் கழற்றினர். அதில், குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து, சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் குழந்தையை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

குழந்தையின் தலையில் ஏற்பட்ட காயங்கள் குறித்து மருத்துவர்கள் மருத்துவ ரீதியான காரணங்களை விளக்கிய போதும், சமாதானம் அடையாத பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மருத்துவமனை செவிலியர்களிடம் குழந்தையின் மரணம் குறித்து மறைமுகமாக விசாரித்த தாகவும், அப்போது, அவர்களில் யாரோ பிரசவத்தின் போது குழந்தை கை தவறி கீழே விழுந்து உயிரிழந்து விட்டதாக கூறியதாகவும், பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதை தொடர்ந்து, மருத்துவமனையின் முன்புறம் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மருத்துவர்களின் அலட்சியத்தால்தான் தனது குழந்தையின் உயிர் பலியாகிவிட்டது எனவும், சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக போராட்டம் நடத்தியும் மருத்துவமனை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
மேலும், குழந்தையின் மரணத்திற்கு காரணமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோஷமிட்டனர்.
இதையடுத்து, வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் அழைத்துச் சென்றனர்.
அப்போது, இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், குழந்தை உடல் ரீதியான பாதிப்பில்தான் உயிரிழந்தது என உறுதியாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இதை உறுதி செய்ய பிரேத பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம் எனவும் மருத்துவமனையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், பிரேத பரிசோதனை செய்ய மறுப்பு தெரிவித்த குழந்தையின் பெற்றோர், தங்களது குழந்தையின் சடலத்தை இறுதிச்சடங்கு செய்ய கொண்டு சென்றனர்.
குழந்தையின் மரணத்தில் சந்தேகம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், மருத்துவமனை முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ததால், அங்கு நீண்ட நேரம் பரபரப்பு ஏற்பட்டது.