திருப்பூர் : உடுமலை அருகே 15 வயது யானை குட்டி தண்ணீர் குடிக்க கான்டூர் கால்வாயில் இறங்கிய போது தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் : உடுமலை அருகே 15 வயது யானை குட்டி தண்ணீர் குடிக்க கான்டூர் கால்வாயில் இறங்கிய போது தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே திரிமூர்த்தி அணைக்கு பரம்பிகுளம் அணையிலிருந்து, கான்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வரப்படுகின்றது. உடுமலை, வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகங்களை உள்ளடக்கிய அடர்ந்த வனப்பகுதிக்குள் கான்டூர் கால்வாய் உள்ளதால் வனப்பகுதிக்குள் வாழும் விலங்குகள் கான்டூர் கால்வாயில் தண்ணீர் குடித்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், இன்று காலையில் நாவலாறு பகுதியில் 15 வயது யானை குட்டி கால்வாயில் தண்ணீர் குடிக்க முயன்ற போது தவறி விழுந்ததுள்ளது. தண்ணீரில் அடித்து வரப்பட்டதில் குட்டி யானை இறந்தது.

இதையடுத்து, கால்வாயில் தண்ணீருடன் அடித்து வரப்பட்டு திரிமூர்த்தி அணைக்கு வந்து சேர்ந்தது. தகவலறிந்து வனஊழியா்கள் உடனடியாக வந்து தண்ணீரில் மிதந்து வந்த யானையைக் கயிறு கட்டி மேலே இழுத்து வந்தனர்.
இதையடுத்து, யானையில் உடல் உடற்கூறு ஆய்வுக்காக திரிமூர்த்தி அணையின் கரையோரத்தில் வைக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர் வந்து உடற்கூறுஆய்வு செய்த பின் யானையின் உடல் அணையின் கரையோர பகுதியிலேயே புதைப்பதற்கு வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே, கடந்த 8 நாட்களாக சின்னதம்பி யானை ஊருக்குள் நுழைந்து விவசாய நிலங்களைச் சேதப்படுத்தி வருவதால் வன ஊழியர்கள் சின்னதம்பியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கான்டூர் கால்வாயில் காட்டு யானை அடித்து வரப்பட்ட சம்பவம் வனத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.