கோவை: கோவையில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்து நகைகளை திருடி தப்பிச்சென்ற வடமாநில கும்பலை பிடிக்க கோவை மாநகர தனிப்படை போலீசார் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: கோவையில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்து நகைகளை திருடி தப்பிச்சென்ற வடமாநில கும்பலை பிடிக்க கோவை மாநகர தனிப்படை போலீசார் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை அவினாசி சாலையில் உள்ள லட்சுமி மில் சந்திப்புக்கு அருகே இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் கடந்த 1ம் தேதி முதல் நகைக் கண்காட்சி நடந்து வருகிறது. இங்கு ஏராளமான அரங்குகளில் புதிய வடிவங்களில் நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கண்காட்சிக்கு 4 பெண்கள் உட்பட 6 பேர் வந்து ஒவ்வொரு அரங்காக சென்று பார்வையிட்டனர். அப்போது, இவர்களில் ஓர் ஆண், 2 பெண்கள் நிகழ்ச்சியை நடத்துபவர்களிடம் பேச்சு கொடுத்து கவனத்தை திசை திருப்பினர்.

இதையடுத்து, மற்றொரு ஆணும், 2 பெண்களும் ஓர் அரங்கிற்குள் நுழைந்து, அங்கிருந்த நகைகளைப் பார்வையிட்டனர். அங்கிருந்த விற்பனையாளரிடம், பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்த நகைகளின் விலை குறித்து கேட்டனர். அதற்கு விற்பனையாளர் பதில் கூறிக் கொண்டிருந்தார். அப்போது ஓர் பெண் விற்பனையாளருக்குத் தெரியாமல், அங்கு வைக்கப்பட்ட 24 பவுன் தங்க நகையை திருடி, அருகேயிருந்த மற்றொரு பெண்ணிடம் கொடுத்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, நகைகளை பிறகு வந்து வாங்குவதாக கூறிவிட்டு இவர்கள் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸார் சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்டு விசாரணை செய்ததில் கொள்ளை கும்பல் குழுவினர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என உறுதியானது.
இதையடுத்து வட மாநிலத்தைச் சேர்ந்த அந்த கும்பலை பிடிக்க கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் பந்தய சாலை காவல் நிலைய குற்றவியல் ஆய்வாளர் மோகன் ராஜ், உதவி ஆய்வாளர் ஜெகநாதன் ஆகியோர் தலைமையிலான 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தனிப்படையில் ஒரு தனிப்படை மகாராஷ்டிரா மாநிலத்தில் மற்றொன்று கர்நாடகா மாநிலத்தில் முகாமிட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.