கோவை : விவசாயத்தின் முதுகெலும்பாய் விளங்கும் கால்நடைகளை போற்றும் விதமாக, வானவராயர் அறக்கட்டளை சார்பில் 'கொங்குநாடு வேளாண் மற்றும் கால்நடைத் திருவிழா', வரும் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பொள்ளாச்சி சக்தி டெக்ஸ்டைல்ஸ் வளாகத்தில் நடைபெறுகிறது.
கோவை : விவசாயத்தின் முதுகெலும்பாய் விளங்கும் கால்நடைகளை போற்றும் விதமாக, வானவராயர் அறக்கட்டளை சார்பில் 'கொங்குநாடு வேளாண் மற்றும் கால்நடைத் திருவிழா', வரும் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பொள்ளாச்சி சக்தி டெக்ஸ்டைல்ஸ் வளாகத்தில் நடைபெறுகிறது.
இதுகுறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விழாவின் ஒருங்கிணைப்பாளர் வெள்ளியங்கிரி கூறியதாவது :- உழவர்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு வேளாண்மை நிறுவனங்களும், அரசுத்துறை நிறுவனங்களும் இணைந்து மாதிரி பயிர்சாகுபடி, காட்சியகம், வேளாண்மையில் நவீனத்திற்கான கருத்தரங்குகள் முதலியவை மூன்று நாட்கள் நடக்கும், 5-ம் ஆண்டு கொங்குநாடு வேளாண் மற்றும் கால்நடை திருவிழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து 60,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், பொதுமக்களும் வருகை தந்தனர். இந்த ஆண்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் திருவிழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, என்றார்.
இவ்விழாவின் முதல் நாளன்று சமத்தூர் பகுதியில் உள்ள கிராமங்களிலிருந்து வரும் 108 பசுக்களின் கோமாதா பூஜை நடைபெற உள்ளது. இந்தாண்டு திருவிழாவின் சிறப்பம்சமாக 'மாதிரிப் பண்ணை' விளங்கும் என்று விழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான இயற்கை ஆர்வலர் சரவணன் சந்திரசேகர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "வேளாண்மையில் மாற்றுப் பயிர்கள், ஊடு பயிர்கள், பணப்பயிர்கள், மூலிகை சாகுபடி, ஆடு வளர்ப்பு, பட்டுப்பூச்சி வளர்ப்பு, மீன்வளர்ப்பு முதலியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை திட்டத்தை உருவாக்குவது குறித்து விழிப்புணர்வும், பயிற்சியும் விவசாயிகளுக்கு வழங்கும் விதமாக மாதிரிப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவை விவசாயிகளுக்கும், பார்வையிடும் பொதுமக்களுக்கும் விவசாயம் குறித்த ஆர்வத்தை உருவாக்கும்," என்றார்.
மேலும், வேளாண் பொருட்கள் மற்றும் கருவிகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட உள்ளது. வேளாண்மை தொழில்நுட்பம் சார்ந்த பயிலரங்குகளும், கருத்தரங்குகளும், கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வானவராயர் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேயம் போன்ற பல்வேறு இன பசுமாடு, பூச்சிகளை, எருது, ஆடு, குதிரை, சேவல், நாய் போன்றவற்றிற்கு இனம் வாரியாகவும், வகை வாரியாகவும் ரூ. 8 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இவற்றோடு ஒட்டுமொத்தமாக வெற்றிபெறும் காங்கேயம் இன மாட்டிற்கு ராயல் என்ஃபீல்டு பைக்கும், சிறந்த ஜோடி காளைக்கு ரேக்ளா வண்டியும், கால்நடை வளர்ப்பில் பங்குபெறும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக, சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.