கோவை : மம்தா பானர்ஜி ஊழல்வாதிகளையும், குற்றவாளிகளையும் காப்பாற்ற முயல்கிறார் என கோவையில் பா.ஜ.க தேசிய செயலாளர் முரளிதர ராவ் குற்றம்சாட்டி உள்ளார்.
கோவை : மம்தா பானர்ஜி ஊழல்வாதிகளையும், குற்றவாளிகளையும் காப்பாற்ற முயல்கிறார் என கோவையில் பா.ஜ.க தேசிய செயலாளர் முரளிதர ராவ் குற்றம்சாட்டி உள்ளார்.
கோவை மாவட்டம், அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் பா.ஜ.க தேசிய செயலாளர் முரளிதர ராவ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசியதாவது :- தமிழக தேர்தல் களத்தை பாஜக உற்று நோக்கி வருகிறது. 5 ஆண்டு கால ஆட்சியில் பா.ஜ.க தேசிய அளவிலும், தமிழ்நாடு அளவிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. எந்த ஆட்சியும் செய்ய முடியாத சாதனையை செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் எங்களை போன்ற சாதனைப் பட்டியல் இல்லை. 5 ஆண்டில் அனைத்து துறையிலும் வளர்ச்சியை கொண்டு வந்துள்ளோம்.
பிப்ரவரி 26 -ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டலங்களில் உள்ள கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக உரையாற்ற உள்ளார். பிப்பரவரி 28 -ல் மத்திய அரசு மூலம் பயனடைந்தவர்கள், தொண்டர்கள் வீட்டின் முன் விளக்கு ஏற்றும் கமல் ஜோதி நிகழ்ச்சி நடைபெறும். மேலும், நாடு முழுவதும் உள்ள 4100 சட்டமன்ற தொகுதிகளில் இரு சக்கர வாகன பேரணி தொகுதி வாரியாக மார்ச் 2 -ம் தேதி நடைபெறும்.

தமிழகத்தில் கூட்டணிக்கு தயாராக இருக்கிறோம். சில கட்சிகளுடன் பேசி வரும் நிலையில், விரைவில் கூட்டணி குறித்து விவரங்கள் விரிவாக தெரிவிப்போம். மேற்கு வங்கத்தில் நடைபெறுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. மம்தா பானர்ஜி ஊழல்வாதிகளையும், குற்றவாளிகளையும் காப்பாற்ற முயல்கிறார். மேற்கு வங்கத்தில் பா.ஜக.,வினர் பேரணி நடத்தக் கூட அனுமதிக்கப்படுவதில்லை. மம்தா பானர்ஜிக்கு ஆதரவு அளிக்கும் தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு இது போன்ற சூழல் ஏற்பட்டால் தான் புரியும், இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், வைகோ கடந்த காலங்களில் தி.மு.க குறித்தும், காங்கிரஸ் குறித்தும் எவ்வாறு விமர்சித்து வந்தார் என்பதை அறிவோம் என சுட்டினார். ஆகையால், நாங்கள் எப்போதும் விவாதங்களுக்கு, உரிய ஆதாரங்களுடன் தயாராக உள்ளோம். எங்களுடன் விவாதிக்கத் தயாரா என அழைப்பு விடுத்தார்.