திருப்பூர் : அவினாசி அருகே தேவராயன் பாளையத்தைச் சேர்ந்த பின்னலாடை வர்த்தகர் ஒருவர், தனது கிராமத்தில் உள்ள முதியோர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, அவர்களை தனது சொந்த செலவில் கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்ற சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
திருப்பூர் : அவினாசி அருகே தேவராயன் பாளையத்தைச் சேர்ந்த பின்னலாடை வர்த்தகர் ஒருவர், தனது கிராமத்தில் உள்ள முதியோர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, அவர்களை தனது சொந்த செலவில் கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்ற சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அவினாசி தேவராயன் பாளையத்தை சேர்ந்த பின்னலாடை மொத்த விற்பனையாளர் ரவி. இவர், தனது பகுதியில் உள்ள ஏழை முதியவர்களின் ஆசையான, விமானத்தில் பயணம் செய்வதை நிறைவேற்ற வேண்டும் என விரும்பினார். அதன்படி, விமானத்தில் செல்ல ஆசைப்பட்ட ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த 65 முதல் 100 வயது வரையிலான 120 முதியவர்களை கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் இலவசமாக சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டார்.

இதனை அடுத்து, நண்பர்கள் சிலரின் உதவியுடன் 120 பேருக்கும் விமான டிக்கெட் எடுக்கப்பட்டு கிராமத்தில் இருந்து இன்று மதியம் கோவை விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை என சொகுசு பேருந்து மூலம் முக்கிய சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு, நாளை இரவு ஊர் திரும்பி வரும் வகையில் இந்த சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது.

தொழிலதிபர் ரவி தொழில் நிமித்தமாக அடிக்கடி விமானப் பயணம் மேற்கொண்டிருந்தாலும், தனது கிராமத்தில் உள்ள வயதானவர்கள் விமானம் வானில் பறக்கும் போது, அதை அன்னாந்து பெருமூச்சோடு பார்ப்பது தனது நினைவில் அடிக்கடி வந்து போனதால், அவர்களின் ஆசையை நிறைவேற்ற இவ்வாறு செய்துள்ளதாக கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
