கோவை : பள்ளி வாகனத்தில் எல்.கே.ஜி பயிலும் 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்த பள்ளிப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கோவை : பள்ளி வாகனத்தில் எல்.கே.ஜி பயிலும் 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்த பள்ளிப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள காரமடை பகுதியில் இயங்கி வருகிறது வித்யா விகாஸ் என்னும் தனியார் பள்ளி. இப்பள்ளியில் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ஊமப்பாளையம் என்னும் பகுதியில் வசிக்கும் நான்கு வயது பெண் குழந்தை, எல்.கே.ஜி வகுப்பில் சேர்ந்து பயின்று வருகிறது. இக்குழந்தை தினசரி அப்பள்ளியின் பேருந்தில் பள்ளி சென்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளியில் இருந்து மாலை திரும்பும் வழியில் பேருந்தில் வைத்து, அதன் ஓட்டுநர் கோவிந்தராஜ் மற்றும் நடத்துநர் மாரிமுத்து ஆகியோர் அக்குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர். பள்ளியில் இருந்து குழந்தையின் இருப்பிடம் தொலைவு என்பதால் பள்ளி பேருந்தில் இருந்து கடைசியாக இறங்கும் குழந்தையிடம் தனிமையைப் பயன்படுத்தியும், மிரட்டியும் பாலியல் துன்புறத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர்.
வீடு திரும்பிய குழந்தையிடம் காணப்பட்ட மாறுதல் மற்றும் உடல் ரீதியான காயங்களினால் சந்தேகமடைந்த பெற்றோர், இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் பள்ளி பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இந்த பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் துடியலூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தொடர்புடைய பள்ளிக்கு சென்ற போலீசார் சம்பவம் நடைபெற்ற பள்ளியின் 3-ம் எண் கொண்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டதோடு, சம்பத்தப்பட்ட ஓட்டுநர் கோவிந்தராஜ் மற்றும் நடத்துநர் மாரிமுத்துவை கைது செய்தனர்.
இதனிடையே, தகவல் கிடைத்து பள்ளிக்கு வந்த இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உரிய சிகிச்சை மற்றும் நிவாரணம் வழங்கவும், தொடர்புடைய குற்றவாளிகள் மீது பெண் குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.