கோவை : நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான குடியரசுத் தலைவர் விருது பெற்ற கோவை மாநகர காவல்துறையின் சிறப்பு நுண்ணறிவு பிரிவில் பணியாற்றும் உதவி ஆணையாளர் வெற்றிச் செல்வனுக்கு, சக காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
கோவை : நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான குடியரசுத் தலைவர் விருது பெற்ற கோவை மாநகர காவல்துறையின் சிறப்பு நுண்ணறிவு பிரிவில் பணியாற்றும் உதவி ஆணையாளர் வெற்றிச் செல்வனுக்கு, சக காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாகப் பணியாற்றிய போலீசார், துணை ராணுவத்தினர் உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் விருது, முதல்வர் விருது வழங்கப்படுகிறது. இதில், கோவை மாநகர காவல்துறையில் சிறப்பு நுண்ணறிவு பிரிவில் உதவி ஆணையாளராகப் பணியாற்றும் வெற்றிச்செல்வனுக்கும் இந்த சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
இவர், 1996-ம் ஆண்டில் காவல்துறையில் பணியில் சேர்ந்து, கடந்த 2011-ம் ஆண்டு முதல் சிறப்பு நுண்ணறிவு பிரிவு ஆய்வாளராக பணியாற்றினார். இதைத் தொடர்ந்து, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி, அத்துறையில் சிறப்பாக செயல்பட்டதால் உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்றார். பின்னர், இந்தத் துறையில் தொடர்ந்து இந்து, முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் இவருக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்ற வெற்றிச்செல்வனுக்கு கோவை மாநகர், மாவட்ட காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இது குறித்து உதவி ஆணையாளர் வெற்றிச்செல்வன் கூறியதாவது:- எனக்கு இந்த குடியரசுத் தலைவர் விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் தொடர்ந்து மத நல்லிணக்கத்தை உருவாக்க செயல்படுவேன். அனைத்து மதங்களும் அன்பை தான் போதிக்கிறது. ஆனால், ஒரு சிலர் அந்த அன்பை விட்டு விட்டு தவறான பாதைகளில் செல்கின்றனர். இதனால், சமூக ஒற்றுமை சீர்குலைகிறது. ஆகவே, மதங்கள் கூறும் அன்பை மட்டும் கடைபிடித்தால் மனிதர்கள் அமைதியாக வாழலாம், என தெரிவித்தார்.