கோவை : ஒண்டிபுதூர் மேம்பாலத்தின் கீழே கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற இரண்டு திருடர்களை தனிநபராக போலீசார் ஒருவர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.
கோவை : ஒண்டிபுதூர் மேம்பாலத்தின் கீழே கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற இரண்டு திருடர்களை தனிநபராக போலீசார் ஒருவர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.
கோவை மாநகரில் பெருகிவரும் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களைத் தடுக்க காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதன்படி, கோவை மாநகரில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் பேட்ரோல் வாகனங்கள் மூலம் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், குற்ற சம்பவங்களை முன்னமே தடுக்க மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் ஐபிஎஸ் மற்றும் துணை ஆணையாளர் சட்டம் ஒழுங்கு டாக்டர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், இரவு முழுவதும் போலீசார் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து, இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் ஒண்டிபுதூர் மேம்பாலம் அருகே கொள்ளையர்கள் இருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் முன்பே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரவிக்குமாரின் மகன் மதன்குமார் (22), கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமாரின் மகன் செந்தில் பிரபு (38), ஆகிய இருவரும் ஸ்பேனர்கள், இரும்பு ராடுகள் போன்ற ஆயுதங்களுடன் ஒண்டிபுதூர் மேம்பாலத்தின் கீழே உள்ள கடைகளை உடைத்து கொள்ளையடிக்கும் முயற்சியில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் இருந்த சிங்காநல்லூர் காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு காவலர் சுகுமார் என்பவர் இருவரையும் விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனிடையே, இருவரையும் சோதனை செய்யும் பொழுது அவர்கள் தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும், விடாப்பிடியாக காவலர் சுகுமார் இருவரையும் மடக்கிப் பிடித்து காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
அதன் பின்னர் தகவலறிந்து வந்த சிங்காநல்லூர் குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். ஏற்கனவே, ஒண்டிபுதூர் மேம்பாலத்தின் கீழே உள்ள கடைகளில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அதே மேம்பாலத்தின் கீழ் மீண்டும் கொள்ளை முயற்சிகள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. ஆகையால், இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் குற்றவாளிகளுக்கும் தற்போது கைது செய்யப்பட்டவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றம் நடப்பதற்கு முன்பாகவே காவலர் ஒருவர் தனியாக ரோந்து பணியின்போது குற்றவாளிகளை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ள சம்பவம் சிங்காநல்லூர் பகுதியிலுள்ள பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறும் போது, தங்கள் உயிரைப் பொருட்டாக எண்ணாமல் பொதுமக்களை பாதுகாக்கும் காவலர்களை உயரதிகாரிகள் ஊக்கப்படுத்தும் போது காவலர்கள் தொடர்ந்து திறம்பட செயல்படுவார்கள், என்றனர்.