கோவை: நாட்டின் 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
கோவை: நாட்டின் 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற விழாவில், காலை 8.05 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அப்போது, வண்ண பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டது.
குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ரவிசந்திரன் தலைமையில் ஆயுதப்படை, தீயணைப்பு துறை, காவல்துறையினரின் பேண்டு குழு, தேசிய மாணவர் படை, ஊர்க்காவல் படை உள்ளிட்டோரின் அணிவகுப்பு நடைபெற்று. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிசந்திரன், காவல் ஆணையாளர் சுமித்சரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் பாலாஜி சரவணன், குற்றப்பிரிவு துணைஆணையாளர் பெருமாள், மேற்கு மண்டல ஐ.ஜி.பெரியய்யா, போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித் உள்ளிட்ட ஏராளமான அரசு துறையைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர், அரசு சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி 138 பேருக்கு தமிழக முதலமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையை சேர்ந்த 11 பேருக்கு சான்றிதழ்களும், பள்ளிக்கல்வி துறையில் சிறப்பாக பணியாற்றிய 17 பேருக்கும், மருத்துவ துறையில் 28 பேருக்கும், சித்தமருத்துவ துறையில் 4 பேருக்கும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையில் 7 பேருக்கும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையில் 6 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, முன்னாள் படை வீரர் துறை 3 பேருக்கு 75,000 ரூபாயும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பேருக்கு நவீன செயற்கை கை, கால் அமைக்க 2,78,000 ரூபாயும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை 20 பேருக்கு இலவச தையல் இயந்திரம் மற்றும் சலவைபெட்டி வழங்குதல் ஆகியவற்றிக்கு 87,680 ரூபாயும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 6 பேருக்கு வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 7,40,000 ரூபாயும் வழங்கப்பட்டது.
மேலும், தோட்டக்கலை துறை சார்பில் 3 பேருக்கு மானிய தொகை 2,37,500 ரூபாயும், வேளாண்மை பொறியியல் துறை 2 பேருக்கு மானிய தொகையாக 20,00,000 ரூபாயும், வேளாண்மை துறை 7 பேருக்கு விசை தெளிப்பான், நீர் செலுத்தும் குழாய் மற்றும் பயிர் விளைச்சல் போட்டிகளுக்கான பரிசு தொகையாக 53,800 ரூபாயும், வருவாய் துறை சார்பில் 82 பேருக்கு கல்வி, திருமணம், இயற்கை மரணம், முதியோர் உதவி தொகை, நலிந்தோர் நல உதவி தொகையாக 14,40,000 என மொத்தம் 49,11,980 ரூபாயிக்கான நலதிட்டங்களை ஆட்சியர் வழங்கினார்.
இதன் பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ஆவரம்பாளையம் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி, சரவணம்பட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பிரசண்டேசன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
பி.எஸ்.ஜி.கிருஷ்ணம்மாள் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீ சைத்தன்யா டெக்னோ பள்ளி, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, அவிநாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மருதமலை தேவஸ்தான பள்ளி, சி.எஸ்.ஐ. ஆண்கள் பள்ளி ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இது அங்கு கூடியிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.