கோவை : தென்னை விவசாயத்தையும், விவசாயிகளையும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் கோயம்புத்தூர் தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் பசுமை தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு, நபார்டு வங்கி கருத்தரங்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பரிசுகளை வழங்கிக் கவுரவித்தார்.
கோவை : தென்னை விவசாயத்தையும், விவசாயிகளையும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் கோயம்புத்தூர் தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் பசுமை தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு, நபார்டு வங்கி கருத்தரங்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பரிசுகளை வழங்கிக் கவுரவித்தார்.

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (NABARD) சார்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில், நீரா பானம் மற்றும் தரமான வேப்பம்புண்ணாக்கு தயாரிப்பிற்காக, கோயம்புத்தூர் தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு முதல் பரிசும், தரமான தென்னை சார்ந்த பொருட்கள் தயாரிப்பிற்காக பசுமை தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு இரண்டாம் பரிசும் கிடைத்துள்ளது. இவர்களுக்கான பரிசுகளையும், பாராட்டுக் கேடயங்களையும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிகளிடம் வழங்கினார்.

கோவை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலூர், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தரமான தென்னை பொருட்களை தயாரிக்கவும் இந்நிறுவனங்கள் உதவிகளைச் செய்து வருகின்றன.

மேலும், தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானிய திட்டங்கள் சலுகைகளை நிறுவனத்தின் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்குக் கிடைக்க வழிவகை செய்து வருகின்றன. தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு (NABARD) வங்கி நிதி உதவி வழங்கியும், வானவராயர் வேளாண்மை கல்வி நிறுவனம் ஆலோசனை மற்றும் பயிற்சிகளையும் வழங்கி இந்நிறுவனங்களை ஊக்குவித்து வருகின்றன.