கோவை : தைப்பூசத்தை முன்னிட்டு கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணியம் சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற திருத்தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.
கோவை : தைப்பூசத்தை முன்னிட்டு கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணியம் சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற திருத்தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.

தைப்பூசத்தை முன்னிட்டு அனைத்துக் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அருள்மிகு முருகப் பெருமானின் ஏழாம் படை வீடு என்று போற்றப்படும் கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருத்தேரோட்டம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 15 -ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கிய தைப்பூச விழாவில் தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், இன்று காலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி மற்றும் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் பிற்பகலில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுப்பிரமணிய சுவாமியின் தேருக்கு முன்பாக அருள்மிகு விநாயகப்பெருமான் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் மற்றும் திருக்கோவில் நிர்வாகத்தினர் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கினர்.

இதையடுத்து, மருதமலை திருக்கோவிலை சுற்றி திருத்தேர் உலா வந்தது. அப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தோளில் காவடி சுமந்து அரோகரா கோஷத்துடன் மேள தாளங்களுக்கு ஏற்ப நடனமாடி பவனி வந்தனர். இதேபோல் கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாக மருதமலைக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் படியேறி நீண்ட வரிசையில் நின்று முருகப்பெருமானை தரிசித்து சென்றனர்.
மேலும், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மருதமலையில் பாதுகாப்பிற்காக 250 -க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். பாதயாத்திரை செல்ல முடியாத பக்தர்களின் வசதிக்காக அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்வதற்கு கோவில் நிர்வாகம் மற்றும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு இலவச பேருந்து சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேபோல், கோவை, கோட்டைமேடு பகுதியில் சுமார் 1300 ஆண்டுகள் பழமையான கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் திருத்தேர் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த விழாவை ஒட்டி 100 -க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர்.