நீலகிரி : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றவாளிகளான சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உதகை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றவாளிகளான சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உதகை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ், சேலத்தில் அதே மாதம் 28-ம் (ஏப்ரல் 28) தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் இரண்டாம் குற்றவாளியான சயான், மனைவி மற்றும் குழந்தையுடன் கோவையில் இருந்து காரில் சென்ற போது மறுநாளே விபத்தில் சிக்கினார். இதில், சயானின் மனைவி விணுபிரியா மற்றும் குழந்தை நீத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயத்துடன் சயான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கோத்தகிரி நீதிமன்றத்தில் நடந்தது. பின்னர், உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.
இதனிடையே, சயான் மற்றும் மனோஜ் தெஹல்கா பத்திரிகையாளர் சாமுவேலுடன் சேர்ந்து கோடநாடு விவாகரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்புள்ளதாகத் தெரிவித்ததை அடுத்து, சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் 13-ம் தேதி டெல்லியில் கைது செய்து, இருவரையும் இரவோடு இரவாக சென்னை அழைத்து வந்தனர். நள்ளிரவே, இருவரும் நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவர்களை நீதிபதி விடுவித்து உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் கேரளாவிற்கு சென்றனர்.
இந்த நிலையில், சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி அரசு வழக்கறிஞர் நந்தகுமார் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.