பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் பொங்கல் வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் பொங்கல் வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தை திங்கள் முதல் நாளான பொங்கல் திருநாளில், மக்கள் அனைவரும் வேறுபாடுகளை மறந்து சகோதரத்துவத்துடன், பொங்கும் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதத்தில் கரும்பு, மஞ்சள், வாழை ஆகிய விளை பொருட்களை வைத்து, புதுப் பானையில் அரிசியிட்டு, ``பொங்கலோ பொங்கல்’’ என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனை வணங்கிக் கொண்டாடுங்கள் என வாழ்த்தியுள்ளார்.
மேலும் தமிழக மக்கள் அனைவருடைய இல்லங்களிலும் பொங்கட்டும் பொங்கல். இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள்! என்று தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் :- மகரசங்கராந்தி, பொங்கல் பண்டிகை, மகுபிகு, உத்திராயன் கொண்டாட்டங்களை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பல்வேறு மொழிகளில் தனித்தனியாக வாழ்த்து பதிவிட்டுள்ளார். இதில் தமிழில் அவர் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பொங்கல் திருவிழா நன்னாளில், தமிழ்நாட்டில் எனது சகோதர, சகோதரிகளுக்கு நல்வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், "பொங்கல் திருவிழாவுடன் – தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளையும் கொண்டாடி மகிழுங்கள் என்றும் எதிர்கால நிலத்தில், நல்லாட்சி விளையட்டும் என்றும், அதற்கான விவசாயம் இந்நாளில் தொடங்கட்டும்," என குறிப்பிட்டுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது :- கடந்து சென்ற ஆண்டு தமிழக வேளாண் பெருங்குடி மக்களுக்கு அதிர்ச்சியும், அல்லலும், துன்பமும் தந்த ஆண்டாகியபோதும், இரவு நீண்டதாக இருந்தாலும், விடியல் உறுதி என்பதைக் கட்டியம் கூறி, கிழக்கு வெளுக்கின்றது; கீழ்வானம் சிவக்கின்றது. “தை பிறந்தால் வழி பிறக்கும்”என்று தமிழர் காலம் காலமாகக் கொண்டு இருக்கின்ற நம்பிக்கைக்கு அடையாளமாக இதோ பொங்கல் நாள் புத்துயிர்ப்புடன் புலர்கின்றது, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.