கோவை : சிங்காநல்லூர் குளம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு ரேடியோ சிட்டி 91.1 சார்பில் குடிமகன் விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.
கோவை : சிங்காநல்லூர் குளம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு ரேடியோ சிட்டி 91.1 சார்பில் குடிமகன் விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.

கோவை மாநகரில் உள்ள குளங்களில் முக்கிய ஒன்றாக திகழ்ந்து வருவது சிங்காநல்லூர் குளமாகும். இந்தக் குளமானது முறையான பராமரிப்பில்லாததால், சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்பட்டு வந்தது. இந்த நிலையில், கோவை மாநகராட்சி, தன்னார்வலர்கள், குயிப் உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து சிங்காநல்லூர் குளத்தை மறுசீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதனால், தற்போது குளம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
இந்த நிலையில், சிங்காநல்லூர் குளம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களுக்காக ரேடியோ சிட்டி 91.1 சார்பில் 'குடிமகன் விருது' வழங்கும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட குளங்களை சீரமைக்கும் பணி தொடர்பான நடவடிக்கையை எடுத்து வரும் கோவை மாநகராட்சி ஆணையர் கே. விஜயகார்த்திகேயனுக்கு குடிமகன் விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கோவை மாநகரில் சமூக பணிகளில் ஈடுபட்ட நடிகர்கள், எழுத்தாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர் என 15 பேருக்கும் விருது வழங்கப்பட்டது.

விருது வழங்கும் விழா குறித்து ரேடியோ சிட்டியின் மண்டல திட்ட இயக்குநர் கே. பிரபு கூறுகையில், "பராமரிக்கப்படாமல் கிடந்த சிங்காநல்லூர் குளத்தை, ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றிய குயிப் அமைப்பின் செயல் பாராட்டுக்குரியது. போற்றத்தக்க இந்தப் பணியினால், குளத்தில் வாழும் உயிரினங்களின் எண்ணிக்கை 700-க்கும் அதிகமாகியுள்ளது. மேலும், மியாவாக்கி முறையில் செடிகள் நடவு செய்தல், கரைகளை பலமாக்குதல், மீன்பிடிக்கத் தடை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது," என்றார்.