கோவை : கோவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உழவர் சந்தை, காய்கறிச் சந்தை மற்றும் ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கோவை : கோவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உழவர் சந்தை, காய்கறிச் சந்தை மற்றும் ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை வெகுவிமர்சயாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கான பொருட்களின் விற்பனை களை கட்டியுள்ளது. கோவை மாவட்டத்தில், உழவர் சந்தை, காய்கறிச் சந்தை மற்றும் ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு, பூலைப்பூ, ஆவாரம்பூ, மஞ்சள் கிழங்கு, மண்பானை ஆகியவற்றை வாங்க மக்கள் கூட்டம் அதிகமாகியுள்ளது.
பொங்கல் பண்டிகையின் சிறப்பம்சமான கரும்பு விற்பனை இன்று தான் சூடுபிடித்துள்ளது. கோவைக்கு திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலிருந்து கரும்புக் கட்டுகள் வருகின்றன. 15 முதல் 20 கரும்புகள் உள்ள ஒரு கட்டின் விலை ரூ.230 முதல் ரூ.400 ஆக உள்ளது.
இந்தாண்டு திருச்சி, தஞ்சை போன்ற மாவட்டங்களில் போதிய மழை கிடைத்ததால், அப்பகுதிகளில் இருந்து அதிக அளவிலான கரும்புக்கட்டுகள் கோவைக்கு வந்துள்ளன. தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய வட மாவட்டங்களில் மழைப் பொழிவு குறைவாக இருந்ததால், அங்கிருந்து கரும்பு வரத்து குறைந்துள்ளது. இதுகுறித்து கரும்பு விற்பனையாளர்கள் கூறும்போது, கரும்பின் தரம் மற்றும் உயரம் ஆகியவற்றைப் பொறுத்து விலை வேறுபடும். கரும்பு விற்பனை நல்ல லாபம் தரும், என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.

கரும்புக்கு எந்த விதத்திலும் சளைக்காமல் பொங்கல் பானையும் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. பாரம்பரிய முறையில் மண் பானையில் பொங்கல் வைக்கும் முறை அதிகரித்து வருவதால், மண் பானையின் விற்பனை இந்தாண்டு அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது பற்றி கவுண்டம்பாளையம் பகுதியில் மண்பானைகள் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் கூறுகையில், "அரைக் கிலோ முதல் ஆறு கிலோ அளவிலான மண் பானைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவற்றின் விலை ரூ.80 முதல் ரூ.350 வரையுள்ளது. இதில், பார்ப்பதற்கு மிக அழகான வகையில், வண்ணம் பூசப்பட்ட பானைகள் சாதாரண பானைகளை விட ரூ.20 அதிகமாக விற்கப்படுகிறது.
மண்பானையில் பொங்கல் வைக்கும் வழக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் விற்பனை அதிகரித்துள்ளது, ஆனால், பொங்கலை முன்னிட்டு அதிக கடைகள் வந்து விட்டதால் விலையில் பெரிய ஏற்றமில்லை' என்கிறார்.
இந்த விற்பனை வரிசையில், பூக்கள் விற்பனையும் முந்திக்கொண்டு வருகிறது. பூலைப்பூ 3 கட்டுகள் ரூ.10 -க்கும், ஆவாரம்பூ 2 கட்டுகள் ரூ.40 -க்கும், இருபது மஞ்சள் கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.150 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பொங்கல் பண்டிகைக்கான விற்பனை நடைபெற்றுவருவதால், காந்திபுரம், பூ மார்க்கெட், சாய்பாபா காலணி ஆகிய பகுதி சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், அந்த பகுதிகளில் வாகன நெரிசல் அதிகமாகியுள்ளது. இதனிடையே, இன்று மாலை மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் என தெரிகிறது.