பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து தி.மு.க., எம்.பி கனிமொழி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து தி.மு.க., எம்.பி கனிமொழி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அரசு நேற்று முன் தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 167 எம்.பி.,க்கள் வாக்களித்தனர். மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க எம்.பி.,க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
மசோதா நிறைவேற்றுவதற்கு முன்பு சுமார் 4 மணிநேரம் விவாதம் நடைபெற்றது. தி.மு.க, அ.தி.மு.க சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து பேசின. முன்னதாக அ.தி.மு.க., எம்.பி.,யும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை இந்த 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்து கடுமையாக சாடி பேசினார்.
இந்த நிலையில், தி.மு.க., எம்.பி கனிமொழி இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மக்களவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை நிகழ்த்தியுள்ளார்.
அவர் பேசியதாவது:-
"அரசியலமைப்பை துஷ்பிரயோகம் செய்வதைக் கண்டால், அதனை எரிக்கும் முதல் நபர் நானாகத்தான் இருக்கும்’’ என்பது டாக்டர். அம்பேத்கரின் கூற்று. இன்று அரசியலமைப்பையும், சட்டத்தையும் கேலிக் கூத்தாக்கிவிட்டது மத்திய அரசு.
இந்த 10% இட ஒதுக்கீட்டு மசோதாவை ஒரே இரவுக்குள் அவசர அவசரமாக நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் என்ன? அனைத்து முடிவுகளையும் தன்னிச்சையாக எடுத்துவிடலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது.
நான் பெரியார் மண்ணிலிருந்து வந்துள்ளேன். சமூக நீதியை நிலைநாட்டும் மண் எங்களுடையது. எங்கள் மண்ணில்தான் சாதி என்னும் பேரில் புறக்கணிக்கப்பட்ட மக்களை முன்னுக்குக் கொண்டுவர, முதன்முதலாக இடஒதுக்கீட்டை நீதிக்கட்சி ஆட்சி கொண்டு வந்தது என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.
ஆனால் அந்த இடஒதுக்கீடும், இதுவும் எப்போதும் ஒன்றாகாது. மத்திய அரசின் 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா இடஒதுக்கீட்டின் அடிப்படையிலிருந்து முற்றிலும் முரண்படுகிறது. காலங்காலமாகச் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே இட ஒதுக்கீட்டின் அடிப்படை.
இட ஒதுக்கீடு பாவம் புண்ணியம் பார்த்து அரசு கொடுப்பது கிடையாது. அது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை. பொருளாதாரத்துக்கும் அவர்கள் ஒடுக்கப்படுவதற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவர்கள் குறிப்பிட்ட சாதியில் பிறந்த ஒரே காரணத்தால் ஒடுக்கப்படுகிறார்கள். இன்னும் பல இடங்களில் சாதிய ரீதியான ஒடுக்குமுறைகளை மக்கள் சந்தித்துக்கொண்டிருக்கின்றன.
உங்கள் மதத்தை மாற்றிக் கொள்ளலாம், உங்கள் பொருளாதார நிலையை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் இந்நாட்டில் என்றைக்கும் உங்கள் சாதியை மாற்றிக் கொள்ள முடியாது. முஸ்லீம் மத சகோதர, சகோதரிகள் பொருளாதார நிலையிலும், கல்வியிலும் எவ்வளவு பின் தங்கியுள்ளனர் என்பது சச்சார் கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மத்திய அரசுக்கு இஸ்லாமிய பெண்களை நினைத்து ரொம்பவே கவலை. ஏன் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வாருங்களேன். நாங்கள் தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொண்டுவந்தோம்.
தற்போதைய சூழலில், கல்வி கடனும் வழங்கப்படுவதில்லை. வாங்கிய கடனையும் இளைஞர்களால் திரும்ப செலுத்த முடியவில்லை. இதற்கு காரணம் வேலையில்லா திண்டாட்டம் தான். அவர்களுக்கு அரசு என்ன உதவி செய்யப்போகிறது.
இதனிடையே, பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு கொண்டுவர முயற்சி செய்யப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் இது தொடர்பான வழக்கில், `பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு நிர்ணயிக்க முடியாது’ என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டது, இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது, குறுக்கிட்ட மாநிலங்களவை துணை சபாநாயகர், `உங்கள் நேரம் முடிந்துவிட்டது; உரையை முடியுங்கள்’ என்றார். அதற்கு மறுமொழியாக கனிமொழி, "தேர்தலுக்காக அவசரம் அவசரமாக இந்தச் சட்டத்தை மோடி அரசு கொண்டுவருகிறது. மசோதாவுக்கு எதிராக இங்கு வெகுசிலரே குரல் எழுப்பியுள்ளனர். அதனையும் பேசவிடாமல் தடுத்தால் எப்படி" என்று கூறி தன் உரையைத் தொடர்ந்தார்.
பத்து சதவிகிதம் என்று எந்த அடிப்படையில் தீர்மானித்தீர்கள். அரசு ஆய்வு ஏதும் நடத்தியதா, தி.மு.க அரசாங்கம் தமிழகத்தில் சட்டநாதன் ஆணையம், அம்பா சங்கர் ஆணையம் உள்ளிட்ட ஆணையங்களை அமைத்து அறிவியல் ரீதியாகப் பல கட்ட சமூக ஆய்வுகள் நடத்தப்பட்டு இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. இந்தப் புதிய சட்டத்திருத்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பி, ஆய்வுக்குப் பின்னர் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், என்றார் கனிமொழி.
தொடர்ந்து கனிமொழி பேசுகையில், மாநிலங்களவை துணை சபாநாயகர், உங்கள் நேரம் முடிந்துவிட்டது என இந்தியில் கூறினார். அதற்கு கனிமொழி "தயவு செய்து எனக்குப் புரியக்கூடிய மொழியில் பேசவும்'' என்றார். அதன்பின் துணை சபாநாயகர் ஆங்கிலத்தில் அவரிடம், `உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் எப்போதோ முடிந்துவிட்டது. உரையை முடித்துக் கொள்ளுங்கள்’ என்றார்.
இதையடுத்து, கனிமொழி "நான் பேச வேண்டும். பல லட்சம் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை இங்கு பதிவு செய்கிறேன்" என்று தொடர்ந்து பேசினார்.
கனிமொழியின் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க உரை தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தமிழகத்தை சேர்ந்த இரண்டு எம்.பி.,க்கள் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக அழுத்தம் திருத்தமாக உரையாற்றியிருப்பது, தமிழக வரலாறு அரசியலமைப்புகளுக்குக் கற்பித்த சிறப்பான அரசியல் என்பதாகவே தோன்றுகிறது.