கோவை : கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விஸ்வாசம் திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை : கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விஸ்வாசம் திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்துள்ள 'விஸ்வாசம்' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், ஃபைனான்சியர் உமாபதி, விஸ்வாசம் படத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கு தொடர்ந்தார். படத் தயாரிப்பு நிறுவனம் தன்னிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கவில்லை. எனவே, படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இறுதியில், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் விஸ்வாசம் படம் வெளியாவதற்கு நீதிமன்றம் தடை விதித்தது. அப்போது, கடனை திருப்பி அளிக்கிறோம் என்றும், ஆனால், விஸ்வாசம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் கோரியதற்கு, அதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்த நிலையில், படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில், பைனான்சியருக்கு கொடுக்க வேண்டிய ரூ.78 லட்சம் கடன் பாக்கியில் ரூ.35 லட்சத்தை இன்றே வழங்குவதாகவும், மீதித்தொகையை அடுத்த 4 வாரங்களில் தருகிறோம் என உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து, விஸ்வாசம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனால், விஸ்வாசம் திரைப்படம் நாளை திட்டமிட்டபடி அனைத்து பகுதிகளிலும் வெளியாகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.