திருப்பூர் : பல்லடம் அருகே திருமணமாகி ஒன்றரை வருடமே ஆன கணவன், மனைவி ஒரே சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் : பல்லடம் அருகே திருமணமாகி ஒன்றரை வருடமே ஆன கணவன், மனைவி ஒரே சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் மகாலட்சுமிநகர் பத்தாவது வீதியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (32). இவர் மனைவி லாவண்யா (24). திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை வருடமாகியும் குழந்தைகள் இல்லை.
இந்நிலையில், இன்று காலை நீண்ட நேரமாகியும் இவர்களது வீட்டின் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அப்பகுதியினர் வீட்டின் ஜன்னல் வழியே பார்த்துள்ளனர். அப்போது மின்விசிறியில் ஒரே சேலையால் தூக்கிட்டு இருவரும் பிணமாகத் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதையடுத்து, வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்ற போலீசார், கணவன், மனைவி ஆகியோரது உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கணவன், மனைவி தற்கொலை செய்து கொள்ள கடன் பிரச்சனை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இளம் தம்பதியினர் தற்கொலை சந்தேகத்தை ஏற்படுத்துவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.