நீலகிரி : இந்தியா சுகாதார அறிக்கையில் பன்றி காய்ச்சலில் தமிழகம் 4-வது இடத்தில் இருப்பதாக உதகையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
நீலகிரி : இந்தியா சுகாதார அறிக்கையில் பன்றி காய்ச்சலில் தமிழகம் 4-வது இடத்தில் இருப்பதாக உதகையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை நகர தி.மு.க. சார்பில், தமிழர் திருநாள் தைப் பொங்கலை முன்னிட்டு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் உதகை ஏ.டி.சி சுகந்திர திடலில் நடைபெற்றது. இவ்விழாவில், நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்பு பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உரையாற்றினார்.

அப்போது, அவர் பேசியதாவது :- தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளை கையில் வைத்துக்கொண்டு, உறவினர்களுக்குப் பணி ஒப்பந்தம் கொடுத்து கமிஷன் பெறுகிறார். சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குட்கா ஊழல், போக்குவரத்துத் துறையில் ரூ. 300 கோடி ஊழல் புரிந்துள்ள போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், பேருந்து வாங்கியதில் ஊழல், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது கமிஷன் குற்றச்சாட்டு, முட்டையில் ஊழல் என தமிழக அரசு ஊழல் நிறைந்த மைனாரிட்டி அரசாக உள்ளது.

இந்தியா சுகாதார அறிக்கையில் பன்றி காய்ச்சலில் தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய பொதுமக்களை சுட்டுக் கொன்று, வெறும் 103 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சட்டத்துக்குப் புறம்பான அரசாங்கம், பிரதமர் மோடி உதவியுடன் தற்போது நடந்து வருகிறது, என அவர் கூறினார்.