கோவை : கோவையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை பொதுமக்கள் செல்போனில் படமெடுத்து புகார் செய்யும் புதிய செயலியை மாநகர காவல் ஆணையாளர் அறிமுகப்படுத்தினார்.
கோவை : கோவையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை பொதுமக்கள் செல்போனில் படமெடுத்து புகார் செய்யும் புதிய செயலியை மாநகர காவல் ஆணையாளர் அறிமுகப்படுத்தினார்.

கோவை மாநகரில் பெருகி வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை காரணமாக போக்குவரத்து நெரிசல்களும் விதிமீறல்களும் நடைபெற்று வருகிறது. இதனால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகிறது. இதனைக் குறைக்க புதிய செயலியை கோவை மாநகர போக்குவரத்து போலீசார் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
போலீஸ் இ- அய் என்ற பெயர் கொண்ட இந்த புதிய செயலியை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித்குமார் ஐபிஎஸ், துணை ஆணையாளர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) டாக்டர் எல்.பாலாஜி சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து காவல் ஆணையர் சுமித்சரண் கூறியதாவது :- இந்த செயலி மூலம் போக்குவரத்து விதிமுறை மீறில்களை காவல்துறைக்கு பொது மக்களே தெரிவிக்க முடியும். தலைக் கவசமின்றி வாகனம் ஓட்டுதல், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்தல், போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்துதல் போன்ற பல விதிமுறை மீறல்களை இந்த செயலி மூலம் புகைப்படம் எடுத்து பொதுமக்களே காவல் துறைக்கு அனுப்ப முடியும். அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்ட இடமும், நேரமும் இந்த செயலி மூலம் பதிவாகும். இதன் மூலம் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இதுகுறித்து போக்குவரத்து உதவி ஆணையாளர் ராஜ் கண்ணா கூறியதாவது :- இந்த செயலி சோதனை அடிப்படையில் நடைமுறை செய்து பார்க்கப்பட்டு 1000 -க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறை மீறிய 30 அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதே போல, அரசு துறை வாகனங்கள் விதிமீறும் போது அந்த துறையின் தலைமை அதிகாரிகளுக்கு விதிமீறல் குறித்த தகவல் சொல்லப்படுவதுடன், அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், இன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியை ஆண்ட்ராய்டு போன்கள் வைத்துள்ள அனைவரும் பயன்படுத்தலாம். இதற்கு கூகுள் பிளே ஸ்டோரில் போலீஸ் இ- அய் (Police E-Eye) என டைப் செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட பின் பெயர், மொபைல் எண் ஆகிய தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும்.

இதையடுத்து, விதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்களை புகைப்படம் எடுத்து இந்தச் செயலியில் பதிவு செய்யலாம். இதன் மூலம் விதி மீறலில் ஈடுபட்டுவர்களிடம் இருந்து அபராத தொகையை பணமாகவோ அல்லது மின்னணு பரிவர்த்தனை மூலமாகவோ பெறப்பட்டு அரசுக்குச் செலுத்தப்படும் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.