நீலகிரி : கோடை சீசனில் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில், குன்னுார் சிம்ஸ்பூங்கா நர்சரியில் முதல்முறையாக பச்சை ரோஜா செடியை நடவு செய்யும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி : கோடை சீசனில் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில், குன்னுார் சிம்ஸ்பூங்கா நர்சரியில் முதல்முறையாக பச்சை ரோஜா செடியை நடவு செய்யும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னுார் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக, ஆண்டுதோறும் புதிய ரக மலர்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த சீசனுக்கு சிம்ஸ் பூங்காவில் பச்சை ரோஜாவை விளைவிக்கும் பணியில் தோட்டக்கலைத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது :- கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 50 பதியன் நாற்றுக்கள் உதகையில் இருந்து எடுத்து வரப்பட்டு, நர்சரியில் புதியரகம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதில், ஒன்றில் பச்சை ரோஜா பூத்துள்ளது. மற்றவையும் தயார் நிலையில் உள்ளன. வரும் பிப்ரவரி மாதம் இவற்றை பூங்காவில் நடவு செய்யப்பட்டு, தொடர்ந்து பராமரிக்கப்படும், என்றனர்.

உதகையில் ரோஜா பூங்கா நுழைவாயிலில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நட்டு வைத்த பச்சை ரோஜா செடி, தற்போதும் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அதில் பூக்கும் மலர்கள், சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்து வருகிறது. இந்த வரிசையில், குன்னுார் சிம்ஸ் பூங்காவில் முதல்முறையாக பச்சை ரோஜா வரும் மே மாதம் நடைபெறவுள்ள கோடை சீசனில் இடம்பெறவுள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் என்று தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.