கோவை : கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்ட அளவில் இருந்து குறைத்து திட்டத்தை நிறைவேற்றுவதினால் எந்தப்பயனும் இல்லை என கொங்கு குளோபல் ஃபார்ம் கருத்து தெரிவித்துள்ளது.
கோவை : கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்ட அளவில் இருந்து குறைத்து திட்டத்தை நிறைவேற்றுவதினால் எந்தப்பயனும் இல்லை என கொங்கு குளோபல் ஃபார்ம் கருத்து தெரிவித்துள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையமானது 600 ஏக்கர் பரப்பளவில் 9 ஆயிரம் அடி ஓடு பாதையில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சரக்கு விமானங்களும், சர்வதேச விமானங்களும் அதிக அளவில் இயக்க 12 ஆயிரம் அடி ஓடு பாதை தேவைப்படுகிறது. தென் இந்தியாவின் மான்செஸ்டர் என சொல்லக்கூடிய கோவை மாநகரின் வளர்ச்சிக்கு இந்த விமான நிலைய விரிவாக்கம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இதனையடுத்து, 2010-ம் ஆண்டு முதல் விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக நிலங்களைக் கையகப்படுத்த பல பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சின்னையம்பாளையம், இருகூர், நிலம்பூர், நீலிக்கோணாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 625 ஏக்கர் நிலங்கள் விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை விமான நிலைய விரிவாக்கம் 625 ஏக்கர் பரப்பளவில் இருந்து 365 ஏக்கர் பரப்பளவாக குறைத்து விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பான திட்டத்தில் மாற்றம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, கோவை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோரை கொங்கு குளோபல் ஃபார்ம் அமைப்பினர் சந்தித்து பேசினர். அப்போது, ஏற்கனவே முடிவு செய்யப்பட்டபடியே இத்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், கோவை விமான நிலைய விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்ட 625 ஏக்கர் பரப்பரளவில் இருந்து 365 ஏக்கர் பரப்பளவாக குறைத்து இத்திட்டத்தை நிறைவேற்றுவதினால் எந்தப்பயனும் இல்லை என கொங்கு குளோபல் ஃபார்ம் கருத்து தெரிவித்துள்ளது. இத்திட்டம் குறைத்து செயல்படுத்தப்பட்டால், வெறும் அலங்கார மாற்றங்களே மேற்கொள்ள முடியும் எனவும் கூறியுள்ளது.
இது தொடர்பாக கொங்கு குளோபல் ஃபார்மின் தலைவர் ஏ. சக்திவேல் கூறுகையில், "கோவை விமான நிலையமானது, திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம், நீலகிரி மற்றும் கேரள மாநிலத்தின் பாலக்காடு உள்பட 8 மாவட்டங்களின் போக்குவரத்துக்கு உதவிகரமாக இருக்கிறது. இதன்மூலம், இந்த மாவட்டங்களில் வணிகம் தொடங்கவும், வளர்ச்சியடையவும் வகை செய்யப்படுகிறது. எனவே, கோவை விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கம் மற்றும் பெரிய விமான நிலையங்களை நிறுத்தும் அளவிற்கான இடவசதி அவசியம்," இவ்வாறு கூறினார்.
கோவை விமான நிலையத்தை திட்டமிட்டபடியே விரிவாக்கம் செய்வது பல்வேறு தொழில்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். மேலும், சர்வேதேச விமானங்கள் மற்றும் இணைப்பு விமான சேவைகள் அதிகரிக்க முடியும். அவ்வாறு அதிகப்படுத்தும் போது, பயணநேரம் குறைகிறது.
இதனிடையே, கொங்கு குளோபல் ஃபார்மின் துணைத் தலைவர் வனிதா மோகன் கூறியதாவது :- 625 ஏக்கர் பரப்பளவில் கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய மாநில அரசு தயாராக இருக்கிறது. அதேவேளையில், விரிவாக்கம் செய்யும் பணிக்காக நில உரிமையாளர்களும், நிலத்தை அரசுக்கு விற்பனை செய்ய முன்வந்துள்ளனர். அனைத்தும் சாதகமான சூழல்களே உள்ள நிலையில், திட்டத்தில் ஏன் மாற்றம் கொண்டு வரப்பட்டது என்பது கேள்வியாகவே உள்ளது. தற்போது, 625 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நிலங்களை கையப்படுத்துவது என்பது முடியாத காரியம்.
கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் முந்தைய திட்டத்திற்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறையே முட்டுக்கட்டைப் போட்டுள்ளது. அதேவேளையில், விமான நிலைய விரிவாக்கப்பணிகள் பல்வேறு கட்டங்களாக நடக்குமானால், அது நிலம் கையகப்படுத்தப்பட்ட அளவே மேற்கொள்ள வேண்டும், என்றார்.