கோவை : கோவை மாநகரில் சிறு, குறு கடைகளில் சோதனைகள் நடத்தப்பட்டு அபராதம் விதித்து வரும் மாநகராட்சி அதிகாரிகள், முன்னணி நிறுவனங்கள் அல்லது கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை கண்டுகொள்வதில்லை என புகார் எழுந்துள்ளது.
கோவை : கோவை மாநகரில் சிறு, குறு கடைகளில் சோதனைகள் நடத்தப்பட்டு அபராதம் விதித்து வரும் மாநகராட்சி அதிகாரிகள், முன்னணி நிறுவனங்கள் அல்லது கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை கண்டுகொள்வதில்லை என புகார் எழுந்துள்ளது.
தமிழக அரசால் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் கோவை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மாநகரில் உள்ள பல்வேறு கடைகளில் திடீர் சோதனை நடத்தி, சட்டவிரோதமாக பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பொருட்களை பயன்படுத்தினால், அவற்றை பறிமுதல் செய்வதுடன் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

அதிகாரிகளின் இந்த சோதனையின் போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பட்டியலில் இல்லாத பொருட்களையும் பறிமுதல் செய்வதாகவும், இதனால், சில்லறை வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக கோவை மாவட்ட பிளாஸ்டிக் தயாரிப்பு சங்கத்தின் தலைவர் வி.கே. பாலு கூறுகையில், "பேக் செய்யப்பட்ட கவர்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகாரிகள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அல்லது கடைகளில் சோதனை நடத்தும் போது, பேக் செய்யப்பட்ட பொருட்களும் சட்டவிரோதமானது என்று கூறி, அதனை பறிமுதல் செய்கின்றனர். அதேவேளையில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போன்ற முன்னனி கடைகளில் மக்கும் வகையிலான மாற்றுப் பொருட்களை பேக் செய்ய பயன்படுத்துவதில்லை," என்றார்.

மேலும், பிளாஸ்டிக் கவர்களில் பார்சல் செய்யப்படும் சூடான உணவுப் பொருட்களை உண்பதால் உடல்நலக்கோளாறு ஏற்படுவதாகவும், இதற்கு மாற்றுப் பொருட்களை பயன்படுத்தலாமே..? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
இதற்கு அவர் பதிலளித்ததாவது :- பாலீதின் கவர்களின் பார்சல் செய்யும் சூடான பொருட்களை உண்ணும் போது, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஆணையர் பி. அமுதா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில், அலுமினியம் பூசப்பட்ட பேக்கிங் கவர்கள் மட்டும் பயன்படுத்துவது என்றும், பிளாஸ்டிக்கால் ஆன கவர்களை பயன்படுத்துவதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டது.

ஆனால், அடையார் ஆனந்தபவனில் வெளியே காகிதத்தினாலும், உள்ளே பிளாஸ்டிக்குடன் கூடிய கவர்கள் பயன்படுத்தப்படுகிறது. பார்ப்பதற்கு காகிதம் போல காட்சியளிக்கும். ஆனால், உண்மையில் அது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்தான் உபயோகிக்கப்படுகிறது. அதனை நாங்கள் நிரூபிப்போம், இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்ட பிளாஸ்டிக் தயாரிப்பு சங்கத்தின் தலைவர் வி.கே. பாலுவின் புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயனை தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கையில், "தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் எங்கு பயன்படுத்தினால், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். சிறு, குறு நிறுவனங்களை மட்டுமே குறி வைத்து சோதனை நடத்தப்படுவதில்லை. 14 வகையாக தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படும் பட்சத்தில், அவை பறிமுதல் செய்யப்படுகிறது. அவர்களின் புகார் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," இவ்வாறு கூறினார்.
இதேபோல, ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனத்தின் மக்கள் தொடர்புத் துறை அதிகாரியை தொடர்பு கொண்டு பேசுகையில், "அரசின் சட்ட திட்டங்களுக்கு எங்களது குழுமம் எப்போதும் கட்டுப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சும் அக்கறை கொண்டுள்ளது. இருப்பினும், தங்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.