கோவை : செல்வபுரம் அருகே முன்விரோதம் காரணமாக தாக்கப்பட்டவர் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், குற்றவாளிகள் 4 பேர் காவல்நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் தனித்தனியே சரணடைந்தனர்.
கோவை : செல்வபுரம் அருகே முன்விரோதம் காரணமாக தாக்கப்பட்டவர் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், குற்றவாளிகள் 4 பேர் காவல்நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் தனித்தனியே சரணடைந்தனர்.
கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங்யூனிட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர், கட்டிடங்களுக்கு இண்ட்டீரியல் டிசைன் செய்து தரும் பணி செய்து வந்தார். சில தினங்களுக்கு முன்னர் இவரது உறவினர் சுரேஷை அதே பகுதியை சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர். இதையறிந்த மணிகண்டன், சுரேஷின் சகோதரர் ரமேஷ் ஆகியோருடன் இருதினங்களுக்கு முன் தாக்கியதை தட்டிக்கேட்பதற்காக இருசக்கர வாகனத்தில் செல்வபுரம் 60 அடி சாலைக்கு சென்றனர்.
அப்போது அங்கு வந்த சிலர், இவர்களை வழிமறித்தனர். இதில், ரமேஷ் இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடினார். தனியாக சிக்கிய மணிகண்டனை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அடித்து உதைத்தனர். இதையறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டதையடுத்து, அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பினர். தாக்குதலில் படுகாயமடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், மணிகண்டன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக செல்வபுரம் போலீஸார் விசாரணை செய்ததில் முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடந்ததும், மணிகண்டனை தாக்கியவர்கள் அதே பகுதியை சேர்ந்த பலராமன், பரத்வாஜ், தினகரன், சேதுராமன் ஆகியோர் எனவும் தெரிய வந்தது. தலைமறைவாக உள்ளவர்களை போலீஸார் தேடி வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக பலராமன், செல்வபுரம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். பின்னர், மனோஜ் என்பவர் கோவை நீதிமன்றத்திலும், மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சேதுராமன், தினகரன் ஆகியோரும் சரணடைந்தனர். சரணடைந்த நான்கு பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.