திருப்பூர் : பவானி ஜமக்காளம், கைத்தறி தரைவிரிப்புகளுக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை நேரில் சந்தித்து திருப்பூர் எம்.பி. சத்தியபாமா இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பூர் : பவானி ஜமக்காளம், கைத்தறி தரைவிரிப்புகளுக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை நேரில் சந்தித்து திருப்பூர் எம்.பி. சத்தியபாமா இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :- 2005-ம் ஆண்டில் புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்று கையால் நெய்யப்பட்ட பவானி ஜமக்காளம் அங்கீகாரம் பெற்றுள்ளது. தமிழகத்தில் பவானி மற்றும் அந்தியூர் பகுதிகளில் பாரம்பரியமாக செயல்பட்டு வரும் கைத்தறி நெசவாளர்கள் இந்த ஜமக்காளத்தை உருவாக்குகின்றனர். இந்தப் பகுதியின் பல்லாயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்களுக்கு வேலை மற்றும் வாழ்வாதாரத்தை வழங்கும் 300 ஆண்டு கால பாரம்பரிய குடிசைத் தொழில் இதுவாகும்.

ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு முன் பவானி ஜமக்காளம் அனைத்து வரிகளில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜி.எஸ்.டி. வரி முறையில் பவானி ஜமக்காளம் உள்ளிட்ட தரைவிரிப்புகளுக்கு அரசு முன்னர் 12% சதவிகித வரி விதித்தது. பின்னர், திருப்பூர் எம்.பி சத்தியபாமா நாடாளுமன்றத்தில் முன்வைத்தும், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி நேரில், புள்ளிவிவரங்களுடன் தொடர்ந்து எடுத்துரைத்ததன் பொருட்டு ஜி.எஸ்.டி. வரி 12%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டது.
பத்தாண்டுக்கு முன் 20,000 குடும்பங்கள் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வந்த நிலையில், தற்போது 6,000 குடும்பங்கள் மட்டுமே இந்த பாரம்பரியத் தொழிலை நம்பியுள்ளன. ஜி.எஸ்.டி. வரி 12% இருந்து 5% ஆக குறைக்கப்பட்ட பிறகும், நெசவாளர்களுக்கு பயனளிக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பவானி ஜமக்காளத் தயாரிப்பை மட்டுமே நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், பவானி ஜமக்காளத்துக்கு ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என்றார்.
இதேபோல, வேளாண்மைக்காக செய்யப்படும் ஆழ்குழாய் கிணறு தோண்டும் மற்றும் துளையிடும் ரிக் (RIG) பணிகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து விலக்கு கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.