கோவை : திருமணத்தின் மூலம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்ட உடுமலை கவுசல்யாவின் கணவர் சக்திக்கு ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை : திருமணத்தின் மூலம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்ட உடுமலை கவுசல்யாவின் கணவர் சக்திக்கு ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கவுசல்யா, சங்கரின் கொலைக்குப் பிறகு, பல்வேறு சமூக நடவடிக்கைகளிலும், சாதி மறுப்பு திருமணத்திற்கு ஆதரவான செயல்களிலும் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த பறை இசைக் கலைஞர் சக்தி என்பவரை கவுசல்யா திருமணம் செய்து கொண்டார். இதனால், சக்தி மற்றும் கவுசல்யா மீது அடுக்கடுக்கான புகார்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

குறிப்பாக, சக்தி ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றியதுடன், திருநங்கை உள்பட பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால், சக்தி மீது கொண்ட காதலும், அவரை மணந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கமும் கருதி, சக்தியின் செயலைக் கண்டிக்கத் தவறியது கௌசல்யாவின் பிழையாகக் கருதப்பட்டது.
அதோடு, இவர்களது இணையேற்பு விழாவை முன்னின்று நடத்திய தோழர் கொளத்தூர் மணி மற்றும் கவுசல்யாவிற்கு ஆதரவாக இருந்த பெரியாரிய இயக்கத் தோழர்கள் மீதும் தேவையற்ற குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன. இதனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முறியடிக்கும் விதமாக, தே.வி.இ. தலைமைக்குழு உறுப்பினர் தியாகு, திராவிடர் - விடுதலைக் கழகத் தலைவர் கொளத்துர் தா.செ.மணி ஆகியோர் சம்மந்தப்பட்டவர்களிடம் கடந்த டிசம்பர் 27-ம் தேதி விசாரணை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது :- ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு மோசமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அநீதிக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர் சக்தி. அந்தப் பெண்ணும் சரி, சக்தி-கவுசல்யாவும் சரி, எங்களிடம் தந்த விளக்கங்களில் அடிப்படையான முரண்பாடு ஏதுமில்லை. பொது அவையிலும் அந்தப் பெண் தொடர்பாக தன் மீதான குற்றச்சாற்றினை சக்தி ஒப்புக்கொண்டார். கவுசல்யாவும் தன் பிழையைப் புரிந்து ஒப்புக்கொண்டார். சக்தி தன் மீதான மற்ற பொதுவான குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கமளித்தார். எதிர்தரப்பினரும் குற்றச்சாட்டுகளை வலியுறுத்தி விளக்கமளித்தனர்.
நீண்ட காலக்கழிவு, வதந்திகளின் ஊர்வலம், தனிமனித விருப்புவெறுப்புகள் ஆகிய காரணிகளின் மூட்டத்தில், எந்த ஒன்றையும் மெய்ப்பிக்கவோ, பொய்ப்பிக்கவோ அறுதியான இறுதிச் சான்று இல்லாத நிலையில், நாங்கள் இவ்வாறு முடிவெடுக்கிறோம். தனது ஆற்றலை வியப்புடன் மதிப்போரை, அதனைக் கொண்டே மடக்கும் போக்கு சக்தியிடம் இருந்து வந்துள்ளதை ஊகிக்க முடிகிறது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பில் கூறியிருப்பதாவது :- சக்தி தன் குற்றங்களுக்காகப் பொது அவையில் மன்னிப்பு கோர வேண்டும். கவுசல்யாவும் பொது அவையில் வருத்தம் தெரிவிக்க வேண்டும். (இது அப்போதே நடந்து முடிந்தது)
சக்தி நிமிர்வு கலையகத்திலிருந்து வெளியேற வேண்டும். இன்றிலிருந்து ஆறு மாதகாலம் சக்தி எந்தப் பொது நிகழ்ச்சியிலும் பறையிசைக்கக் கூடாது. இழப்பீடு என்ற வகையில் சக்தி ஆறு மாத காலத்துக்குள் ரூ.3 லட்சம் தொகை செலுத்த வேண்டும். இந்தத் தீர்ப்பில் எந்தப் பகுதி குறித்தும் மேல்முறையீடு செய்ய விரும்பினால் மூன்று மாதத்துக்குப் பின் செய்யலாம்.
இது தொடர்புடைய அனைவரும் இந்தத் தீர்ப்பை செயலாக்குவதில் உளமார ஒத்துழைக்க வேண்டும். அறத்தின் கட்டளை.முடிவுகளை அறிவித்த பின்னரும், தேவையற்ற செயல்களில் ஈடுபடுவது அல்லது தேவையற்ற விமர்சனங்களைப் பொதுவெளியில் வைப்பது அல்லது சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவது போன்ற செயல்பாடுகள் முடிவை மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதைத் தெளிவாக அறிவிக்க விரும்புகிறோம், என அறிவிக்கப்பட்டுள்ளது.