கோவை : தமிழக அரசின் பிளாஸ்டிக் தடையால் மாற்றுப் பொருட்களில் விலை உயர்வாலும், பார்சல் செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
கோவை : தமிழக அரசின் பிளாஸ்டிக் தடையால் மாற்றுப் பொருட்களில் விலை உயர்வாலும், பார்சல் செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
தமிழக அரசு வரும் ஜனவரி 2019 முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் ஹோட்டலியர்ஸ் சங்கத்தின் கீழ் மட்டும் 180-க்கும் மேற்பட்ட உணவு விடுதிகள் உள்ளன. தமிழக அரசு பிளாஸ்டிக்கை தடை செய்ய போகிறோம் என கடந்த ஜுன் மாதம் அறிவிக்கும் போதே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு ஹோட்டல் சங்கம் உணவுப் பொருட்களை வாங்க பாத்திரம் கொண்டு வந்தால் அதற்கு விலையில் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்தது.
உணவு விடுதி உரிமையாளர்களின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்றாலும், வாடிக்கையாளர்களுக்கு இது நடைமுறை சாத்தியமாகவில்லை.
இதனிடையே, தற்போது பிளாஸ்டிக் தடையால் உணவுப் பொருட்களை பார்சல் செய்ய மாற்றுப் பொருட்களை உபயோகப்படுத்துவது என இச்சங்கம் முடிவு செய்துள்ளது. ஆனால், மாற்றுப் பொருட்களின் விலை தற்போது உபயோகப்படுத்தப்பட்டு வரும் பிளாஸ்டிக்கை விட நான்கு மடங்கு விலை உயர்வாக உள்ளது. இதனால், பார்சல் உணவுகளின் விலை உயர வாய்ப்புள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட ஹோட்டலியர்ஸ் சங்க செயலாளர் ஆர். பாலசந்தர் கூறுகையில், "பிளாஸ்டிக் தடை என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அனைத்து விஷயங்களிலும் இது சாத்தியம் இல்லை. சாப்பாடு வாங்க பாத்திரம் கொண்டு வருபவர்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், இதுவரை நாள் ஒன்றுக்கு ஒருவர், இருவர் கூட பாத்திரம் கொண்டு வருவதில்லை.

பார்சல் உணவுகளின் விலை இதனால் உயர வாய்ப்புள்ளது. இணையதளம் மூலம் ஆர்டர் செய்பவர்களும், பொதுமக்களும் இதனால் விலை உயர்வை சந்திக்க நேரிடும். தமிழக அரசிடம் இது குறித்து பேச அனுமதி கேட்டுள்ளோம். விரைவில் பேசவுள்ளோம்," என்றார்.
இதனிடையே, உணவு விடுதி அருகில் வசிப்பவர்கள் பாத்திரங்களை எடுத்து வர முடியும். ஆனால், வெளியூர் செல்பவர்கள், அலுவலகம் செல்வோர் என அனைவராலும் பாத்திரங்களை கொண்டு வரமுடியாது. அதேபோல, ஒரு சாப்பாடு வாங்க சாதம், 3 வகை குழம்பு, கூட்டு, பொரியல் என ஐந்திற்கும் மேற்பட்ட பாத்திரங்களை எவ்வாறு எடுத்து வர முடியும். பார்சல் வாங்கினால் விலை உயரத்தான் செய்யும். இதனால், எங்களுக்கும் மேலும் சுமை தான் என வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் மனோஜ் கூறுகையில், "சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்றாலும், அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யாமல் இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும். பார்சல் உணவு பொருட்களுக்கு விலை அதிகமாக வாங்கும் நடைமுறை வந்துவிட்டது. பிளாஸ்டிக் தடைக்கு மாற்றுப் பொருட்களை ஆராய வேண்டும். அதன்பின் மானியம் வழங்கி அந்தப் பொருட்கள் மீதான விலைவாசிகளை குறைக்க வேண்டும். பிளாஸ்டிக் உற்பத்தி செய்வோரிடம் அரசாங்கம் கலந்து பேசி அவர்களுக்கு மானியம் வழங்கி மாற்றுப் பொருட்களை உற்பத்தி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்," என்றார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மக்களும் முன் வரவேண்டும். அரசாங்கம் எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைப்பு அளித்து பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாலும், மாற்றுப் பொருட்களின் விலைகளை குறைக்க அரசு மானியம் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.