திண்டுக்கல் : பழனி மலைக் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, குரங்குகளை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர்.
திண்டுக்கல் : பழனி மலைக் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, குரங்குகளை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர்.
பழனி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது, சபரிமலை சீசன் மற்றும் தைப்பூச திருவிழா தொடங்க உள்ளதையொட்டி, பழனி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை குரங்குகள் பிடுங்கிச் செல்வது அதிகரித்துள்ளது. குரங்குகளால் சிலநேரங்களில் பக்தர்களுக்கு காயம் ஏற்படுவதுமுண்டு. இதனால், குரங்குகளைப் பிடிக்க கோவில் நிர்வாகம் முடிவு எடுத்தது.
அதன்படி, வனத்துறை சார்பில் கூண்டுகள் வைக்கப்பட்டு குரங்குகளை பிடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. கூண்டில் உள்ள பழங்களை எடுப்பதற்காக திரண்ட குரங்குகள் ஒவ்வொன்றாகப் பிடிக்கப்பட்டது. சுமார் 50-க்கும் மேற்பட்ட குரங்குகளை பிடித்த வனத்துறையினர் கொடைக்கானல் சாலையில் உள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். தொடர்ந்து மலைக்கோவில் பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "குரங்குகள் யாரையும் தாமாக கடிப்பதில்லை. யாரேனும் அதனை துன்புறுத்த முயன்றால் மட்டுமே கடிக்கின்றன. எனவே, கோவிலுக்கு வரும் பக்தர்கள் குரங்குகளை துன்புறுத்தும் செயல்களில் ஈடுபடாமல் இருந்தாலே, அவற்றால் அவர்களுக்கு தொந்தரவு கிடையாது," என்றனர்.