திண்டுக்கல் : பழனி அருகே ஏ.டி.எம்.மில் செக்யூரிட்டி போல நடித்து பணம் எடுக்க உதவுவதாகக் கூறி இரு பெண்களிடம் பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் : பழனி அருகே ஏ.டி.எம்.மில் செக்யூரிட்டி போல நடித்து பணம் எடுக்க உதவுவதாகக் கூறி இரு பெண்களிடம் பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பழனி எருமைக்கார தெருவில் வசித்து வரும் கீதா கூறியதாவது :- நேற்று முன்தினம் பழனி தபால்நிலையம் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் செயல்படும் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுப்பதற்காக எனது சகோதரனுடன் சென்றேன். ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. அப்போது, ஏ.டி.எம். மையத்தில் நாற்காலியில் காவலாளி போல அமர்ந்திருந்த நபர் ஒருவர் பணம் எடுக்க உதவுவது போல வந்து ஏ.டி.எம். கார்டை வாங்கினார்.
பின்னர், ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் இல்லை என்று கூறி ஏ.டி.எம். கார்டை திருப்பிக் கொடுத்தார். இதனையடுத்து, வீட்டிற்கு சென்றுவிட்டோம். இந்த நிலையில், நேற்று வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்துள்ளதாக தொடர்ந்து குறுந்தகவல் வந்தது. பிறகுதான் அந்த நபர் ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து நூதன முறையில் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. ஒரேநாளில் ஏ.டி.எம்.மில் பணமாகவும், ஆன்லைனில் நகை மற்றும் துணிகள் என்று ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் திருடப்பட்டு உள்ளது, என்றார்.

அதேபோல, பழனி பத்ரா தெருவை சேர்ந்த கற்பகம் என்ற பெண்ணிடமும் ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து ரூ.5,000 பணம் திருடப்பட்டது தெரியவந்தது. ஒரேநாளில் பெண்களை ஏமாற்றி, வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பழனியில் சமீபகாலமாக ஏ.டி.எம். மையத்திற்கு வரும் நபர்களை குறிவைத்து மர்மநபர்களால் பணம் திருடப்படுவது அதிகரித்துள்ளது. சபரிமலை பக்தர்கள் மற்றும் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், காவல் துறையினர் ஏ.டி.எம். திருடர்களைப் பிடித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பழனி நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.