கோவை : தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அமல்படுத்தவுள்ள, மக்களே சேனல்களை தேர்வு செய்து பார்க்கும் புதிய முறையை ரத்து செய்ய வலியுறுத்தி தொலைக்காட்சி பெட்டிகளைச் சுமந்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அமல்படுத்தவுள்ள, மக்களே சேனல்களை தேர்வு செய்து பார்க்கும் புதிய முறையை ரத்து செய்ய வலியுறுத்தி தொலைக்காட்சி பெட்டிகளைச் சுமந்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வரும் ஜனவரி மாதம் முதல் மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், மக்களே சேனல்களை தேர்வு செய்து பார்க்கும் புதிய முறையை நடைமுறைப் படுத்தவுள்ளது. இந்தத் திட்டம் அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும். எனவே, கேபிள் டிவி புதிய கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்திக் கடந்த திங்களன்று 300 -க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில், அந்த முறையை எதிர்த்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழகத்தின் இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் தலைமையில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்பாட்டத்தில் தொலைக்காட்சி பெட்டிகளை சுமந்தும், தரையில் வைத்தும் கண்டனத்தை வெளிப்படுத்தினர். இந்த புதிய முறையால் கேபிள் டிவி கட்டணம் ரூ.500 வரை வசூலிக்க வேண்டி வரும் என்பதால் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, கட்டண உயர்வைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
இது குறித்து அர்ஜூன் சம்பத் கூறுகையில், "ஆரம்பத்தில் இலவச சேனல்கள் வழங்கிய தனியார் நிறுவனங்கள் தற்போது கட்டண சேனல்களாக மாற்றம் செய்து வருகின்றனர். ஏற்கனவே, இவர்கள் விளம்பரம் மூலம் அதிகளவில் வருமானம் பெற்று வருகின்றனர். எனவே, அரசு ரூ.70 ரூபாய்க்கு அனைத்து சேனல்களையும் வழங்க வேண்டும். இனிவரும் காலங்களில் செட்-அப் பாக்ஸ் அல்லது டிஜிட்டல் முறை மூலம் மட்டுமே பார்க்க முடியும் என்பதால் அரசு கேபிள் மூலமே அனைத்து சேனல்கள் மக்கள் பார்க்கும் வகையில் ஏற்படுத்த வேண்டும்," என்றார்.

மேலும், இந்து மக்கள் கட்சியினர் ஆர்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.