கோவை : கடை திறப்பதற்கு முன்னதாக டாஸ்மாக்கில் மதுபானம் தரமறுத்ததால், மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கையை அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை : கடை திறப்பதற்கு முன்னதாக டாஸ்மாக்கில் மதுபானம் தரமறுத்ததால், மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கையை அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கார்த்தி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இன்று காலை அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்ற அவர், குடிப்பதற்கு மதுபானம் கேட்டுள்ளார். ஆனால், கடை 12 மணிக்கு மேல் தான் திறக்கும் என்பதால், கடையின் ஊழியர்கள் மதுபானம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால், அதிருப்தியடைந்த ஆட்டோ ஓட்டுநர் கார்த்தி, முறைகேடாக மதுபானம் விற்பதாக அந்தக் கடையின் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இதன் பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த ஆட்டோ ஓட்டுநர் கார்த்தி, தனது சட்டை பையில் வைத்திருந்த பேனா கத்தியை எடுத்து, கையை அறுத்துக்கொண்டார். மேலும், காவல்துறையினர் வேண்டுமேன்றே தன் மீது வழக்கு தொடுப்பதாக அழுதபடியே தெரிவித்தார். கையில் ரத்தம் சொட்ட சொட்ட நின்றவரை கண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் அளித்தனர். அங்கு வந்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கார்த்தி கூறுகையில், "நான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டேன். எனவே, அரசு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்," எனக் கூறினார்.
இது குறித்து போலீஸ் கூறியதாவது :- இவர் இது மாதிரி பலமுறை டாஸ்மாக் கடைகளுக்கு சென்று பணம் கொடுக்காமல் மதுபானம் கேட்டுள்ளார். மேலும், செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இது தொடர்பாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இதுமாதிரி ஏதாவது ஒரு பிரச்சினையைக் கூறி இது மாதிரி நடந்து கொள்வது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுபானத்திற்காக வாலிபர் ஒருவர் கையை அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.