கோவை : கூட்டணி குறித்து நியாயமற்ற வாதங்களை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்வைப்பதாகவும், கூடாநட்பின் விளைவை தி.மு.க. அனுபவிக்கும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை : கூட்டணி குறித்து நியாயமற்ற வாதங்களை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்வைப்பதாகவும், கூடாநட்பின் விளைவை தி.மு.க. அனுபவிக்கும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று மாலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது
அவர் பேசியதாவது :- இந்து முன்னணி சார்பில் திருப்பூரில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு வந்து உள்ளேன். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவம் பொரித்த நாணயம் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் வாஜ்பாயின் பிறந்தநாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. அதில், அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பது குறித்து விளக்கக் கூட்டம் நடைபெறும், என்றார்.

மேலும், எமெர்ஜென்ஸியை விட மோசமான ஆட்சி நடைபெறுவதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளது குறித்த கேள்விற்கு அவர் பதிலளித்ததாவது :- இந்த ஆட்சியில் எத்தனை சிட்டிபாபுகள் கொல்லப்பட்டுள்ளனர்..?, எத்தனை ஆற்காடு வீராசாமி போன்ற பெரியவர்கள் செவிப்பறைகள் நொறுக்கப்பட்டுள்ளது..?. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் காங்கிரஸுடன் ஏற்படுத்தியுள்ள கூட்டணி அவருக்காக உயிர்துறந்த சிட்டிபாபு போன்றவர்களுக்கு செய்யப்படும் துரோகம். 'கூடா நட்பு கேடில் முடியும்' என கலைஞர் அடிக்கடி சொல்லுவார். அதை ஸ்டாலின் செய்து வருகிறார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதால் ஏற்படும் விளைவுகளை தி.மு.க.வினர் நாளை சந்திப்பார்கள். மிகப்பெரிய தோல்வியை தி.மு.க.,-காங்கிரஸ் கூட்டணி சந்திக்கவுள்ளது.
1999-ல் பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்த போது கொள்ளை அடிக்க முடியவில்லை. அடுத்த 10 ஆண்டுகளில் காங்கிரஸுடன் வைத்திருந்த கூட்டணியில் கொள்ளையோ கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அதற்கு சாட்சி, ஆ.ராசா தான். எது கொள்ளை ஆட்சி என்பது அவர்களுக்கு தெரியும். மேகதாது விவகாரம் தொடர்பாக இங்கு நடத்திய கூட்டத்தை தி.மு.க., காங்கிரஸ் பெங்களூரில் கூட்டம் நடத்தி இருக்க வேண்டும். மேகதாது விவகாரத்தில் தி.மு.க., காங்கிரஸ் கட்சியினரின் நடிப்பு நவராத்திரி சிவாஜி கணேசனை மிஞ்சிய நடிப்பாக இருக்கின்றது. உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சார்பில் நடைபெறும் போராட்டம் தொடர்பாக அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் பங்கேற்பது குறித்து இதுவரை எந்தமுடிவும் எடுக்கவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகும், இவ்வாறு அவர் கூறினார்.