திருப்பூர் : திருப்பூர் அருகே ஜோதிடர் ஒருவர் மர்ம நபரால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் : திருப்பூர் அருகே ஜோதிடர் ஒருவர் மர்ம நபரால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மங்களம் பாரதி புதூரைச் சேர்ந்த ரமேஷ் என்கிற குமார். இவர், குமரன் சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவிற்கு வெளியே கடந்த 14 வருடமாக கிளி ஜோதிடராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று மதியம் தனது பணியை முடித்துவிட்டு சாப்பிட சென்ற ரமேஷை பின் தொடர்ந்து வந்த ஹெல்மெட் அணிந்த நபர் ஒருவர், ரமேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு சென்றுள்ளார். இதில், ரமேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும், கொலை செய்த நபர் தன் கையில் கொண்டுவந்த துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களிடம் விநியோகித்துள்ளார். அதில், ரமேஷ் பூங்காவிற்கு வரும் காதலர்களையும், பெண்களையும் தீய சக்திகள் மூலம் தன் வசமாக்கி, அவர்களை தவறாக பயன்படுத்துவதாக எழுதியிருந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு தனது பெண் தோழியோடு பூங்காவிற்கு வந்த நிலையில், இவரிடம் ஜோசியம் பார்த்துவிட்டு சென்ற பின்பு, பெண் தோழி தன்னிடம் இருந்து விலகி சென்றுவிட்டதாகவும், இதுவரை அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை எனவும், இதுபோல் பல குடும்பத்தினை இவர் சீரழித்து இருப்பதாகவும் கூறி துண்டுபிரசுரங்களை வழங்கியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மிகவும் பரபரப்பான பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .