கோவை : வடவள்ளி அருகே தேடப்பட்டு வந்த பிரபல கஞ்சா வியாபாரி சக்திவேலை பீளமேடு போலீசார் கைது செய்தனர்.
கோவை : வடவள்ளி அருகே தேடப்பட்டு வந்த பிரபல கஞ்சா வியாபாரி சக்திவேலை பீளமேடு போலீசார் கைது செய்தனர்.
கோவை பீளமேடு போலீஸார் கடந்த அக்டோபர் மாதம் அவினாசி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு சந்தேகத்திற்குரிய காரை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, அந்த காரில் 110 கிலோ கஞ்சா கடத்த முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, காரில் இருந்த மதுரை முத்துப்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரி (46), சக்திவேல் (49), பெருமாநல்லூரைச் சேர்ந்த கார் ஓட்டுனர் அசோக் (31) ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் அளித்த தகவலின் பேரில், கஞ்சா வியாபாரிகளான சிங்காநல்லூரைச் சேர்ந்த முகம்மதுரபீக் (23), கோகுல்கண்ணன் (23), ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த தினேஷ் பாபு (24), பிரவீன் (24) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக வீரகேரளத்தை சேர்ந்த சக்திவேல், மதுரையைச் சேர்ந்த முத்துலட்சுமி, குனியமுத்தூரைச் சேர்ந்த முஜிபூர்ரஹ்மான் ஆகிய மூன்று பேரயும் தேடி வந்தனர்.
இந்த நிலையில், கஞ்சா வியாபாரி சக்திவேலை நேற்று முன்தினம் பீளமேடு போலீஸார் கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கை தொடர்பாக பீளமேடு சட்டம் ஒழுங்கு போலீஸார் கூறியதாவது:- கைது செய்யப்பட்ட கோவை வீரகேரளம் புதூரைச் சேர்ந்த சக்திவேல், கடந்த 20 ஆண்டுகளாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆந்திரா மாநிலத்தின் விஜயவாடா மாவட்டத்தின் பாடகிரி மலைப்பகுதியில் இருந்து பல நூறு கிலோ கணக்கில் கஞ்சா வாங்கி கூட்டாளிகள் உதவியுடன் கோவைக்கு கொண்டு வந்து, தலா 2 கிலோ அடங்கிய பாக்கெட்டுகளாக பிரித்து, தனக்கு கீழ் உள்ளவர்களிடம் அளித்துள்ளார். அவர்கள் கஞ்சாவை 10 கிராம், 20 கிராம் என்ற அளவுகளில் பாக்கெட் போட்டு, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்துள்ளனர்.
2 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சக்திவேல் மீது பீளமேடு, துடியலூர், வடவள்ளி உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் கஞ்சா வழக்குகள் உள்ளன. குமுளியைச் சேர்ந்த தன் கூலிப்படை நண்பர் ராஜ்குமார் உதவியுடன், சிறு கஞ்சா வியாபாரிகளை மிரட்டி, பெரிய கஞ்சா வியாபாரியாக சக்திவேல் வலம் வந்துள்ளார். தேடப்பட்டு வந்த இவரை, வடவள்ளி அருகே கைது செய்தோம். இவருக்கு உடந்தையாக இருந்த முத்துச்செல்வி, முஜிபூர்ரஹ்மான் ஆகியோரை தேடி வருகின்றோம், இவ்வாறு போலீஸார் கூறினர்.