கோவை : வாடிக்கையாளர்களின் பணத்தை உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக எஸ்.பி.ஐ. மீது கோவையை சேர்ந்த வெளிநாடுவாழ் இந்தியர் புகார் தெரிவித்துள்ளார்.
கோவை : வாடிக்கையாளர்களின் பணத்தை உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக எஸ்.பி.ஐ. மீது கோவையை சேர்ந்த வெளிநாடுவாழ் இந்தியர் புகார் தெரிவித்துள்ளார்.
கோவையை சேர்ந்தவர் தீபா சிவஞானம். இவர் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். இவருக்கு அமெரிக்க வங்கியில் கணக்கு உள்ளது. இவருடைய ஓ.எஸ்.பி. கார்டின் மூலம், இந்தியாவில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியிலும் என்.ஐ.ஆர். (வெளிநாடுவாழ் இந்தியர்) கணக்கும் தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், தீபா சிவஞானம் சொந்தக் காரணங்களுக்காக கோவைக்கு வந்துள்ளார். கடந்த நவம்பர் 29-ம் தேதி தனது அமெரிக்க வங்கி கணக்கில் இருந்து சுமார் ரூ. 35,62,236-ஐ எஸ்.பி.ஐ. வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் மாற்றியுள்ளார். மறுநாள் அமெரிக்கா கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், டிசம்பர் 19-ம் தேதிதான் தீபாவின் எஸ்.பி.ஐ. வங்கிக் கணக்கில் பணம் வந்து சேர்ந்துள்ளது. சுமார் 20 நாட்களாக வங்கியில் பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தின் நிலை என்னவென்பது குறித்து தெரியாமல் அவர் நிம்மதி இழந்து காணப்பட்டு வந்துள்ளார்.
இதனிடையே, பணபரிமாற்றத்திற்கு இவ்வளவு கால தாமதமானது தொடர்பாக அமெரிக்கா வங்கியை தொடர்பு கொண்டு பேசிய போது, ஏற்கனவே மும்பையில் உள்ள எஸ்.பி.ஐ. தலைமையகத்திற்கு பணம் பரிமாற்றம் ஆகிவிட்டதாக தீபாவிடம் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மும்பை தலைமையக எஸ்.பி.ஐ.க்கு தொடர்பு கொண்ட போது, அதன் கிளை வங்கிகளுக்கு இந்தப் பணத்தை வழங்கியது தெரிய வந்தது. மேலும், 75 டாலர் செலுத்தினால் 3 தினங்களுக்குள் பணம் பரிமாற்றம் செய்ய முடியும் என வங்கி அதிகாரிகள் அலட்சியமாகக் கூறியுள்ளனர்.
இதேபோல, கோவையில் தனியார் ஏஜென்சி நடத்தி வரும் ஜே. ரமேஷ்குமார் என்பவருக்கும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. 10 ஆண்டுகளாக எஸ்.பி.ஐ. வங்கியில் கணக்கு வைத்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 5 லட்சம் மாயமானது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், வங்கியை நேரிடையாக அணுகி விசாரித்துள்ளார். அப்போது, இந்த விவகாரத்தை பெரிது படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட வங்கி அதிகாரி, அவருக்கு புதிய வங்கிக் கணக்கை தொடங்கிக் கொடுத்ததுடன், அதில், மாயமான ரூ. 5 லட்சத்தையும் செலுத்தியுள்ளார்.
எந்தத் தடையுமின்றி ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றம் செய்வதை விளம்பரப்படுத்தி வரும் எஸ்.பி.ஐ. வங்கியில், இதுபோன்று வாடிக்கையாளர்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணத்தை எடுத்து, சுய தேவைக்காக பயன்படுத்தி வருவது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. நீங்களும் ஒருவேளை எஸ்.பி.ஐ. வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், ஆன்லைன் பணப்பரிமாற்றம் மற்றும் வங்கி வரவு, செலவு கணக்குகளில் உஷாராக இருங்கள்.