கோவை : கோவை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் நடைபெறும் மேம்பாலம் மற்றும் சாலை பணிகளால் வாகன ஒட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாற்று வழிச்சாலைகளை பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே ஏற்பாடு செய்து தரக்கோரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை : கோவை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் நடைபெறும் மேம்பாலம் மற்றும் சாலை பணிகளால் வாகன ஒட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாற்று வழிச்சாலைகளை பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே ஏற்பாடு செய்து தரக்கோரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் அதனை குறைக்கும் பொருட்டு காந்திரபுரத்தில் பார்க் கேட் சிக்னல் முதல் சத்தி சாலை ஆம்னி பேருந்து நிலையம் வரை சுமார் ரூ. 160 கோடி மதிப்பீட்டில் முதற்கட்ட மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் இரண்டு அடுக்கு மேம்பாலமாக திட்டமிடப்பட்டு ரூ. 195 கோடி ஒதுக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு தொடங்கிய பால பணிகள் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது.

ஆனால், இந்த மேம்பாலம் வழியாக கிராஸ் கட் ரோடு மற்றும் 100 அடி ரோடு பகுதிகளுக்கு செல்ல ரவுண்டனா அமைக்கப்படும் என மக்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பார்க் கேட் முதல் ஆம்னி பேருந்து நிலையம் வரை எங்கும் நிறுத்தம் இல்லாமல் செல்லக்கூடிய வகையில் தான் இந்த பாலம் அமைந்தது. இதனால், பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்தனர். இதனிடையே, 100 ரோடு மற்றும் சின்னசாமி ரோட்டில், ரூ.75 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.
இதற்காக சித்தபுதூர் சாலையானது அடைக்கப்பட்டு காந்திபுரம் வழியாக அவினாசி சாலை செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. சித்தப்புதூர் அருகே உள்ள சாலைகளில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும், கார்கள் சென்றால் எதிரில் வாகனம் வந்தால் செல்வது கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ. 216 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ந்தேதி தொடங்கியது. சுமார் 1.95 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் அமைக்கப்படுகிறது. முதற்கட்டமாக, மேம்பாலத்தில் 55 தூண்கள் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ. 131 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பால பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக அரசு, தனியார் மற்றும் கல்லூரி பேருந்துகள் அனைத்தும் ஒரு வழிப்பாதையாக இயக்கப்பட்டு வருகிறது. ஆத்துபாலத்திலிருந்து புட்டு விக்கி லேக், செல்வபுரம், மீன்மார்க்கெட் வழியாக உக்கடம் பேருந்து நிலையம் வர உத்தரவிடப்பட்டுள்ளது. உக்கடத்திலிருந்து ஆத்துபாலம் செல்ல வழக்கம் போல் கரும்புக்கடை வழியே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, ஆத்துப்பாலத்திலிருந்து உக்கடம் பேருந்து நிலையம் வர வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் சுமார் 5 கி.மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய சூழ்நிலையுள்ளது.
அதேபோல, கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட ரத்தினபுரி அருகே உள்ள தயிர்டேரி - கண்ணப்பன் நகர் ரயில்வே சுரங்க பாலம் பணிகள் 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக அரசால் ரூ. 14 கோடிக்கு அறிவிக்கப்பட்டு, தற்போது சுரங்க பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோவை மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து ரத்தினபுரி வழியாக சிவானந்தா காலனி செல்லவும், கண்ணப்பன் நகர், தயிர்டேரி பகுதியிலிருந்து கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லவும் இந்த ரயில்வே சுரங்க பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. பாலம் பணிகள் தொடங்கியதிலிருந்தே வாகனங்கள் 3 அல்லது 4 கி.மீட்டர் தூரம் சங்கனூர் பாலம் வழியாக சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது.
ஈச்சனாரியில் இருந்து பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டி வரை 26.85 கிலோ மீட்டர் தூர சாலை, நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது. இந்த சாலை 36 மீட்டர் அகலத்துக்கு நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இந்த பணிக்காக ரூ. 415 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நான்கு வழிச்சாலையில் நான்கு மேம்பாலங்கள் கிணத்துக்கடவு, ஒத்தக்கால்மண்டபம், ஈச்சனாரி, முள்ளுபாடி ஆகிய பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில், தற்போது ஈச்சனாரி மேம்பாலப் பணிக்காக மலுமிச்சம்பட்டி வழியாக வாகனங்கள் செல்ல மாற்றிவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, கோவை - அவிநாசி சாலையில் உப்பிலிப்பாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை ரூ. 340.53 கோடி மதிப்பில் உயர்நிலைப் பாலம் கட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக மண் பரிசோதனை பணிகளும் நடைபெற்று வருகிறது. அதேபோல் கோவை - மேட்டுப்பாளையம், திருச்சி சாலை ஆகிய பகுதிகளில் பல இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த பணிகள் அனைத்தும் நிறைவடையும் பட்சத்தில், போக்குவரத்து நெரிசல் குறையும் என்பது ஒருபுறம் என்றாலும், தற்போது இந்த மேம்பால பணிகளால் மாற்று பாதையானது முறையாக திட்டமிடப்படாததால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் அருள்ராஜ் கூறுகையில், "மேம்பாலம், சாலை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் போது, அதன் அருகில் உள்ள சாலைகள் சீரமைத்து மாற்றுப் பாதையை உருவாக்கி போக்குவரத்து நெரிசல் இல்லாமல் நெடுஞ்சாலைத் துறையினர் உருவாக்க வேண்டும். ஆனால், நகரில் நடக்கும் பணிகளில் மாற்றுப்பாதையானது முறையாக திட்டமிடப்படாமல், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. அந்த அந்தப் பகுதிகளுக்கு அருகில் உள்ள குறுகிய சாலைகளை முதலில் சீரமைத்து மாற்றுப் பாதையை உருவாக்க வேண்டும்," என்றார்.
இது குறித்து நெஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாற்றுப் பாதைகள் முறையாக திட்டமிடப்பட்டு, அதனை சீரமைத்துவிட்டு தான் மேம்பாலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. கோவை மாநகர் பகுதிகளில் பல இடங்களில் நடைபெறும் மேம்பாலப் பணிகள் விரைவில் முடிக்கப்படும்," என்றார்.
போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை விரைவில் முடிக்கப்பட வேண்டும். மாற்று பாதைகள் சீரமைத்து தற்போது ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.