கோவை : கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் போக்குவரத்து காவலரால் உருவாக்கப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டது.
கோவை : கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் போக்குவரத்து காவலரால் உருவாக்கப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை அதிகரிப்பதற்கு ஈடாக வாகன எண்ணிக்கைகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சாலை விதிகளை மதிக்காமல் அலசியமாக செல்வதால் விபத்துகளும் அதிகரித்துள்ளன. இதனை தவிர்க்க சாலை விதிகளை கடைபிடித்து, உயிரையும், உடமையையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கோவை காவல்துறையினர் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் நிகழ்வுகள் ஏற்படுத்தபட்டு வருகிறது.
கோவை பந்தய சாலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து காவலராக பணிபுரிகிறார் ராக்கி மகேஷ் என்ற மகேஸ்வரன். இவர் சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 'மதிக்கனும் மதிக்கனும்' என்ற பாடலை உருவாக்கியுள்ளார். இப்பாடலை இன்று கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் சுமித் சரண், போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித் குமார் மற்றும் சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் டாக்டர். பாலாஜி சரவணன் ஆகியோர் வெளியிட்டனர்.

இந்த பாடலில் இருசக்கர வாகனத்தை ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும், கார் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிய வேண்டும், செல்பேசி கொண்டு வாகனம் இயக்க கூடாது உள்ளிட்ட பல சாலை விதிகளை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த விழிப்புணர்வு பாடலை உருவாக்கிய ராக்கி மகேஷ் கூறுகையில், "நான் காவல் துறையில் சேருவதற்கு முன்பாகவே கலைத்துறையில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். ஆனால், எனக்கு காவல்துறையில் வேலை கிடைத்துவிட்டது. எனவே, கொஞ்ச நாட்கள் பொறுமையாக இருந்தேன்.
இதற்கிடையில், ஓய்வு நேரங்களில் சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் குறும்படங்களை எடுத்து வந்தேன்.இதுவரை குறும்படங்கள் ,பாடல்கள் என 10 படைப்புகளை இயக்கியுள்ளேன். தற்போது போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதிக்கனும் என்ற பாடலை இயக்கியுள்ளேன்.
இதற்காக, எனக்கு கோவை மாநகர காவல்துறை அதிகாரிகள் பல உதவிகளை செய்து வருகின்றனர். ஆகவே, இன்னும் பல்வேறு விழிப்புணர்வு படங்களை எடுப்பேன்," என்றார்.