கோவை : கோவை மாநகரில் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்களை அகற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த கோவை மாநகராட்சி முயன்று வருகிறது.
கோவை : கோவை மாநகரில் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்களை அகற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த கோவை மாநகராட்சி முயன்று வருகிறது.

கோவை மாநகரில் மொத்தம் சேகரிக்கப்படும் குப்பைகளில் 58% இயற்கைக் கழிவுகளும், 19 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் கழிவுகளுடன் அடங்கும். அவை, மாநகர் முழுவதும் அமைக்கப்படும் 67 திடக்கழிவு மேலாண்மை மையங்களில் வைத்து பிரித்தெடுக்கப்பட இருக்கிறது. அதில், 10 மையங்கள் ஜனவரி 15-ம் தேதிக்குள் பயன்பாட்டிற்கு வரும். அதில், பயோமைனிங் மூலம் குப்பைகள் அழிக்கப்படும். வரும் வாரத்தில் 10 திடக்கழிவு மேலாண்மை மையங்களுக்கான டெண்டர் கோரப்பட இருக்கிறது.
இது தொடர்பாக கோவை மாநகராட்சி மூத்த அதிகாரிகள் கூறுகையில், "உலர் கழிவுகளை கையாளுவதற்காக பீளமேடு, உக்கடம், சவுரிபாளையம் மற்றும் சொக்கம்புதூர் 4 பகுதிகளில் திடக்கழிவு மையங்கள் திறக்கப்பட இருக்கின்றன. இவற்றில், மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், மறுபயன்பாட்டிற்காக மறுசுழற்சி மையங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன்மூலம், வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் இருக்கும் குப்பைகளின் அளவு கணிசமாக குறைக்கப்டும்," இவ்வாறு கூறினர்.

இந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த கோவை மாநகராட்சி, ஜெர்மன் அரசின் நிதியுதவியுடன் இயங்கும் ஜி.ஐ.இசட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. ஜெர்மன் நிறுவனமானது ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் கோவை, புவனேஸ்வர் மற்றும் கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உதவி செய்து வருகிறது. இதனிடையே, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இருக்கும் பிரச்சனைகள் மற்றும் கருத்துகள் பற்றி ஆலோசிக்கும் வகையில், கோவை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஜி.ஐ.இசட் நிறுவனத்தின் அதிகாரிகள் கடந்த வாரம் கலந்தாலோசனை மேற்கொண்டனர். முடிவில், அனைத்து வார்டுகளிலும் இருக்கும் ஓ.எஸ்.ஆர். சைட்டுகளில் திடக்கழிவு மேலாண்மை மையத்தை அமைப்பது என திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுவாக, பூங்காக்கள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட பகுதி உள்ளிட்ட பொதுமக்களின் பயன்பாட்டிற்கான இடங்களை ஓ.எஸ்.ஆர். சைட்டுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த வாரம் திருவள்ளூர், எம்.ஜி.ஆர். நகரில் உள்ள பூங்காவுக்கான பகுதியில் திடக்கழிவு மேலாண்மை கூடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில், எம்.ஜி.எம்., நகர்நல முன்னேற்ற சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பூங்காக்களில் ஒரு பகுதியை திடக்கழிவு மேலாண்மை நிலையத்துக்கு பயன்படுத்துவதற்காக உள்ளாட்சி நிர்வாகத்தைக் குறை கூற முடியாது. குப்பை கிடங்குகளை முறையாக பராமரிப்பதையும், அதனால், பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாமல் இருப்பதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பூங்காக்களின் பயன்களையும், குப்பை கிடங்குகளின் தேவையையும், உள்ளாட்சி அமைப்புகள் சம அளவில் பரிசீலிக்க வேண்டியுள்ளது, இவ்வாறு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாநகராட்சியால் கழிவுப் பொருட்களை அகற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு நிரந்தர தீர்வு காணப்படும் பட்சத்தில், நாள்தோறும் மாநகரில் 860 டன் குப்பைகள் அகற்றப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.