கோவை : தடாகம் பகுதியில் விளைநிலங்களைச் சேதப்படுத்தி வந்த காட்டு யானைகளை, இன்று காலை மயக்க ஊசி செலுத்தி வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.
கோவை : தடாகம் பகுதியில் விளைநிலங்களைச் சேதப்படுத்தி வந்த காட்டு யானைகளை, இன்று காலை மயக்க ஊசி செலுத்தி வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.
கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் வெகுநாட்களாகவே விநாயகன், சின்னத்தம்பி என்ற இரண்டு யானைகள் பயிர்சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்திக்க நேர்வதால் அவற்றை அப்புறப்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தொடர்ச்சியாக மனு அளிக்கப்பட்டதையடுத்து, கடந்த மாதம் இரண்டு காட்டு யானைகளையும் பிடித்து முதுமலை வனப்பகுதியில் விட மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டார்.

இதற்கிடையே, யானையைப் பிடிக்க ஆட்சியர் உத்திரவிட்டும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் சென்னையில் உள்ள முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகத்தைக் கோவை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, இரண்டு காட்டு யானைகளையும் உடனடியாக அப்புறப்படுத்தும் படி வனத்துறையினருக்கு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 5.30 மணிக்கு விநாயகன் என்ற காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியை வனத்துறையினர் தொடங்கினர்.

பெரிய தடாகம் அருகில் மலை அடிவாரத்தில் இருந்த 4 முதல் 5 டன் எடையுள்ள விநாயகன் என்ற காட்டு யானைக்கு வனத்துறை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தினர். இதனால், அந்த யானை மயக்கமடைந்தது. வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையில் 4 மருத்துவர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் இந்தக் காட்டு யானையைக் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஶ்ரீவத்சவா கூறும்போது, காட்டு யானை விநாயகன் அதன் இளம்பருவத்திற்கேற்றவாறு ஆரோக்கியமாக உள்ளது. அதன் கால்கள் இரண்டைக் கட்டியுள்ளோம். அதன் காரணமாக அது நகர வாய்ப்பேதும் இல்லை.

மேலும், அதன் கழுத்தில் ரேடியோ காலர் அணிவிக்கப்பட்டு அதன் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படவுள்ளது என்றார்.