கோவை : விவசாய நிலத்தில் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையான இழப்பீடு வழங்க கோரியும் கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையில் பல நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை : விவசாய நிலத்தில் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையான இழப்பீடு வழங்க கோரியும் கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையில் பல நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மையத்தில் நடைபெறும் போராட்டம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் மருத்துவர் தங்கமணி தலைமையில் நடைபெற்று வருகிறது. விவசாய நிலங்கள் வழியாகக் கொண்டு செல்ல உள்ள மின் கோபுரங்களைச் சாலை வழியாகக் கொண்டு செல்ல வேண்டும். மின் கோபுரங்கள் உள்ள விவசாய நிலங்களில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும், தவறாமல் வருடாந்திர வாடகை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 13 மாவட்டங்களில் 8 மையங்களில் இந்தக் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இது குறித்துக் கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை மையத்தில் போராடி வரும் ஏர்முனை இளைஞர் அணி மாநிலத் துணை தலைவர் சுரேஷ் கூறுகையில், "போராட்டம் தொடரும், முதல்வர் அல்லது மின் துறை அமைச்சரிடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும். போராட்டத்தைத் தீவிரப்படுத்த அதன் வடிவம் மாற்றப்படும்," என்றார்.
இதைப்போலவே, திருப்பூரில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு அரசு அனுமதி மறுத்த நிலையில், நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும்போது அரசு செவி சாய்க்காத பட்சத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டம் தொடர் உண்ணாவிரத போராட்டமாக மாறும் என்றனர்.
