கோவை : கோவையில் பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைக்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கால தாமதமாக வந்ததால் மாணவிகள் வெயிலில் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
கோவை : கோவையில் பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைக்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கால தாமதமாக வந்ததால் மாணவிகள் வெயிலில் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
வரும் ஜனவரி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லும் பொருட்டு மாவட்டம் தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளை கொண்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவையில் இன்று விழிப்புணர்வு பேரணிக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. காலை 9:30 மணிக்கு பேரணி தொடங்கும் என்றும், மாணவிகள் அதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழுமியிருக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, காலை 8:30 மணியளவில் மூன்று பள்ளிகளை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டனர்.

தொடந்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், காவல் ஆணையர் சுமித்சரன், வருவாய் துறை அதிகாரிகள், வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆட்சியர் வளாகத்தில் குவிந்தனர்.
சரியாக 9:30 மணியளவில் ஆட்சியர் பேரணிக்கு அனைவரும் தயாராகி இருந்தனர். இன்னும் "நம்ம அமைச்சர் வரவில்லை கொஞ்சம் பொறுங்கள்" என்று மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மாணவிகள் மத்தியில் தெரிவித்தனர்.

ஆனால், அரை மணி நேரமாகியும் அமைச்சர் வந்தபாடில்லை. 10:15 மணியளவில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கார் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தது.
அதற்கு முன்பாக அவ்வளாகத்தில் குவிந்திருந்த மாணவிகள் வெயிலில் தாக்கம் தாழாமல் ஆங்காங்கே இருந்த மரத்தடியில் தஞ்சம் புகுந்திருந்தனர்.

களைப்பு
சிற்றுண்டி, குடிநீர் என்று எந்த வசதியும் இன்று களைத்துப் போயிருந்த மாணவிகள், ஜெயராமன் வந்த உடனே, பேரணி செல்ல வரிசையில் நிற்குமாறு பணிக்கப்பட்டனர்.
"இப்டின்னு தெரிஞ்சுருந்தா முன்னாடியே சாப்பிட்டிட்டு வந்திருப்பேன்" என்ற கிசுகிசு சத்தம் மாணவிகள் கூட்டத்தில் இருந்த கேட்க முடிந்தது.
பொதுவாக காலை உணவை விரும்பாத பல மாணவிகளுக்கு இன்று புரிந்திருக்கும் அது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்று.
"சரி, ஜெயராமன் சார் வந்தாச்சு, அமைச்சர் வருவாரான்னு தெரியல, ஆரம்பிச்சுடலாமா" என்று கால்கடுக்க காத்துக்கிடந்த பத்திரிக்கையாளர்களும் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினர். அதற்கு, "அமைச்சர் வந்துட்டார். இருங்க." என்று பதில் கிடைத்தது.
மாணவிகள், அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என்ற ஒரு பெரும் பட்டாளம் மீண்டும் சுமார் 15 நிமிடங்கள் வெயிலில் காத்து நின்றனர்.
சரியாக 10:30-க்கு வி.ஐ.பி. எஸ்கார்ட் கார்களுக்கு இடையில் அமைச்சரின் கார் சீறிட்டு வந்தது.
காரில் இருந்து இறங்கிய அமைச்சருக்கு, மற்றவர்களை காத்திருக்க வைத்தது தவறாக பட்டதாக தெரியவில்லை.
வந்தவுடன், சுற்றுச்சூழல் அமைச்சரிடம், "எங்கள் மாவட்டத்திற்கு வந்திருக்கிறீர்கள். வாங்க." என்று கூறி பொன்னாடை ஒன்றை அணிவித்தார்.
பிறகு மீண்டும் ஒரு ஐந்து நிமிட இடைவேளைக்குப் பின் பேரணி என்ற சிறையில் இருந்த மாணவிகள் வா.உ.சி பூங்கா மைதானத்தை நோக்கி "பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்" என்ற வாசகங்கள் முழங்க நடைபயணம் மேற்கொண்டனர்.
பொதுவாகவே விழாக்களில் பங்கேற்க வரும் நம் ஊர் அமைச்சர் 'லேட்' ஆக் வருவதையே வழக்கமாக கொண்டவர். எந்த விழாவிற்கும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வந்த ஒரு மணி நேரத்திற்கு பிறகே அமைச்சர் வந்து சேர்வார்.
ஆனால், இன்று பள்ளி மாணவிகள் சிரமப்பட்டுவிடகூடாது என்பதற்காகவாவது கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கலாம்...!