கோவை : மேட்டுப்பாளையத்தில் பவானியாற்று கரையோரப்பகுதியில் கோவில் யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட நலவாழ்வு புத்துணர்வு முகாம் இன்று தொடங்கியது.
கோவை : மேட்டுப்பாளையத்தில் பவானியாற்று கரையோரப்பகுதியில் கோவில் யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட நலவாழ்வு புத்துணர்வு முகாம் இன்று தொடங்கியது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் கோவில் யானைகளுக்கான 11 -வது புத்துணர்வு முகாம் இன்று காலை தொடங்கியது. தொடர்ந்து 48 நாட்கள் நடக்கவுள்ள இந்த முகாமை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஶ்ரீனிவாசன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் செவ்வூர் எஸ். ராமச்சந்திரன் மற்றும் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

இவ்விழாவில் பங்கேற்ற அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், "28 யானைகள் வெவ்வேறு ஆலயங்களில் இருந்தும் மடங்களில் இருந்தும் இந்த முகாமிற்கு வருகை தந்துள்ளன. அதில் 22 யானைகள் தமிழகத்தைச் சேர்ந்தது. மற்றொன்று பாண்டியைச் சார்ந்தது. மீதமுள்ள 4 யானைகளும் மடத்தைச் சேர்ந்தவை. இந்த யானைகளுக்கு நல்ல மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காகத் தேர்ந்த கால்நடை மருத்துவக்குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன ," என்றார்.

கால்நடை மருத்துவ அதிகாரி தரப்பில் கூறுகையில், "சில யானைகளுக்குச் சிறப்பு கவனம் தேவைப்படும். சிலவற்றிற்குப் பாத நோய்களுக்கான சிகிச்சை அவசியமாக இருக்கும். அவற்றை அறிந்து அதற்கேற்றவாறு சிகிச்சை அளிக்க உள்ளோம்," என்றார்.
இதுபற்றி மற்றொரு அதிகாரி கூறுகையில், "சில யானைகளுக்குப் பரவக்கூடிய நோய்கள் இருக்க வாய்ப்புள்ளது. பிற யானைகளைக் காப்பதற்காக அவை தனியாக கவனித்துக் கொள்ளப்படும்," என்றார்.

இதற்கிடையில், அருகாமையில் வசிக்கும் விவசாயிகள், இந்த முகாம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஏற்கனவே, இது போன்ற முகாம் நடைபெற்றதால் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களைச் சேதப்படுத்தியதே அதற்கு காரணம்.

எனவே, பயிர் சேதம் ஏற்படாமல் இருக்க விவசாயிகள் ஒன்றிணைந்து, இந்த முகாமை இடமாற்றக் கோரி வழக்குத் தொடுத்தனர். அவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முகாமின் நிலப்பரப்பைத் தேர்ந்தெடுத்த காரணம் குறித்து தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியது. அதற்குள் முகாம் தொடங்கி, யானைகளின் பராமரிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

இதையடுத்து, மேட்டுப்பாளையத்தில் விவசாயிகள் இன்று முகாமை முற்றுகையிட்டது குறிப்பிடத்தக்கது.