கோவை : சவுரிபாளையம் - பீளமேடு சந்திப்பை இணைக்கும் சாலையை உடனடியாக சரி செய்து தர வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் மனு அளித்துள்ளனர்.
கோவை : சவுரிபாளையம் - பீளமேடு சந்திப்பை இணைக்கும் சாலையை உடனடியாக சரி செய்து தர வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் மனு அளித்துள்ளனர்.
இந்திய தேசிய காங்கிரஸ் கோவை மாநகர் மாவட்டம் 65-வது வார்டு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது :- கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், சவுரிபாளையம் - பீளமேடு சந்திப்பை இணைக்கும் சாலை வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். செளரிபாளையம் வழியாக செல்லும் பேருந்துகள் மாற்று வழியாக செல்வதால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகள் சுமார் 3 கி.மீ. சுற்றி வரவேண்டிய சூழலே உள்ளது.
எனவே, 15 நாட்களுக்குள் இப்பணியை நிறைவு செய்து தர வேண்டும். அவ்வாறு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளாவிடில் பொதுமக்களுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.