கோவை: கணபதி பகுதியில் வசித்துவரும் ஆறு வயது பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அதே பகுதியைச் சேர்ந்தவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
கோவை : கணபதி பகுதியில் வசித்துவரும் ஆறு வயது பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அதே பகுதியைச் சேர்ந்தவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
கணபதி அருகே வசித்து வருபவர் ஜோசப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கூலித்தொழிலாளியான இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், நேற்று நள்ளிரவு அவரது வீட்டில் இருந்த ஆறு வயது பெண் குழந்தை திடீரென காணாமல் போனது.

இதையடுத்து மாயமான குழந்தை அப்துல் ஜாபர் வீட்டில் இருந்தது தெரியவந்தது. மேலும், குழந்தைக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதுகுறித்து குழந்தையின் தந்தை அக்கம் பக்கத்தினரிடம் கூறியதும் அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்றுகூடி அப்துல் ஜாபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அப்துல் ஜாபரிடம் இதுகுறித்து விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் பொதுமக்கள் ஆத்திரமடைந்து கூச்சலிட்டனர். மேலும், அக்குழந்தையின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையிலும் அப்பகுதியில் வசிப்பவர்கள் கூறிய புகாரின் அடிப்படையிலும் அப்துல் ஜாபரை காவல்துறையினர் பத்திரமாக மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இப்பகுதியில் இதே போன்று பல்வேறு குழந்தைகளிடம் அப்துல் ஜாபர் தவறாக நடக்க முயற்சிப்பதை அப்போது பொது மக்கள் தெரிவித்தனர். அப்பகுதியில் சுற்றியுள்ள பொதுமக்கள் அனைவரும் நள்ளிரவு ஒன்று கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறையிடம் இதுகுறித்து கேட்டபொழுது, "அக்குழந்தைக்கு எந்தவிதமான அவப்பெயரும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், அப்பகுதியில் உள்ள பெரியோர்களின் அறிவுறுத்தலால் குற்றவாளி மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும்." என்றும் தெரிவித்தனர்.