கோவை: இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் பெண்களுக்கும், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயமில்லை என்று மோட்டார் வாகனச் சட்டம் கூறியுள்ளது.
கோவை: இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் பெண்களுக்கும், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயமில்லை என்று மோட்டார் வாகனச் சட்டம் கூறியுள்ளது.
தமிழகத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதிலும் உள்ள போலீசார் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
கோவையைப் பொறுத்தவரையில் மாநகர போலீசார் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பதாகைகளை வைத்துள்ளனர். மேலும், தொடர்ந்து விதிமுறையைப் பின்பற்ற தவறி, ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
அபராதம்
மோட்டார் வாகனச் சட்டம் 129-ன் படி, பொதுவாக இருசக்கர வாகன ஒட்டி ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பயணித்து போலீசாரிடம் சிக்கும்போது ரூ.100 அபராதமாக செலுத்த வேண்டும், தற்போது வெளியாகியுள்ள நீதிமன்ற உத்தரவின் படி, பின்னால் அமர்ந்து செல்பவர் ஹெல்மட் அணியாமல் இருந்தால் அவரும் ரூ.100-ஐ அபராதமாக செலுத்த வேண்டும்.

அதன்படி, கோவையின் பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகனத் தணிக்கை நடத்தி வருகின்றனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் பின்னல் அமர்ந்திருப்பவர் ஹெல்மட் அணியாமல் வரும் போது அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி, கடந்த 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மட்டும் 250-க்கு மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த உத்தரவு பெண்களுக்கும், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் இல்லை. இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் பெண்களுக்கும், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் ஹெல்மெட் அணியத் தேவை இல்லை என்கிறது மோட்டார் வாகனச் சட்டம். பிரிவு 417-A படி, இந்த விதிவிலக்கை அறிவித்துள்ளது மோட்டார் வாகனச் சட்டம்.

இது குறித்து கோவை மாநகர காவல் போக்குவரத்து துணை ஆணையர் சுஜித் குமார் கூறுகையில், "இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஹெல்மெட் விதிவிலக்கு இருப்பது உண்மை தான். ஆனால், பாதுகாப்பு கருதி அவர்களும் ஹெல்மெட் அணிந்தால் நல்லது." என்றார்.